Thursday, October 21, 2010

மர்ம யோகி அகத்தியர் 11

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து பேருந்தில் நெல்லை திரும்பிக் கொண்டிருந்தேன்.அருகில் ஒரு வெள்ளையர்.காவி வேஷ்டி ,கழுத்தில் உருத்திராட்சம் மற்றும் ஏராள நவமணி மாலைகளுடன் கொஞ்சம் மார்க்கமாகவே இருந்தார்.கையில் ரமணர் பற்றிய புத்தகம் ஒன்று.நானோ ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து கொண்டு ஸ்டீபன் ஹாகிங் புத்தகத்துடன் இருந்தேன்.எனக்கு அந்த சூழலின் முரண் புரிய அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன்.மதுரை வரை விடாது பேசிக் கொண்டே வந்தார் அவர்.பேசியதில் அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நில அளவியலாளர் என்று அறிந்து கொண்டேன்.விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கிறார்.இது ஏழாவது முறை.இந்தியா முன்பை விட இப்போது அதிக சத்தம் போடுகிறது என்று சிரித்தார்.சாலையோர மோட்டல்களில் நட்ட நடு இரவிலும் அலறும் பாடல்களைத்தான் அவ்விதம் குறிப்பிட்டார்.ஆனாலும் அவர் பஸ் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் இறங்கிப் போய்விடுவார்.ஒருவேளை சர்க்கரை நோயாளியோ என்று நினைத்தேன்.இல்லை.அவர் போனது வாழைப்பழங்களுக்காக.ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறைய வாழைப் பழங்களோடு வருவார்.எனக்கும் சேர்த்து  வாங்கிவந்து வற்புறுத்துவார்.எனக்கு அவரது வாழைப் பழக் காதல் ஆச்சர்யமளிக்க உங்கள் ஊரில் அவை கிடைப்பதில்லையா என்று கேட்டேன்.'இத்தனை வகை.இத்தனை ருசி கிடைப்பதில்லை''என்றார்.அங்கு கிடைப்பதெல்லாம் தென் அமெரிக்காவில் இருந்து வரும் பெரிய ஆனால் ருசி அதிகம் அற்ற பழங்கள்.அது இருக்கட்டும்.வாழைப் பழத்துக்கும் அகத்தியருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..வருகிறேன்.

இந்தியாவில் மட்டும் எப்படி இத்தனை வகை வாழைப் பழங்கள் கிடைக்கின்றன?காரணம் இந்தியாதான் வாழைப்பழத்தின் தாயகமாய் இருக்க கூடும்.ஒரு தாவரம் எங்கு முதலில் தோன்றியதோ அங்குதான் அதிக வகைகளைக் காணமுடியும்.நான் பிறந்த இடத்தில்தான் என் சொந்தக் காரர்கள் அதிகம் இருப்பார்கள் இல்லையா.அது போல்தான்.உதாரணமாக இன்று நாம் அதிகமாக பயன் படுத்தும் உருளைக் கிழங்கு உள்ளூர்  அல்ல.தென் அமெரிக்காவைச் சார்ந்தது.அதில் மட்டுமே குறைந்தது ஐந்தாயிரம் வகைகள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.நம்மிடம் அத்தனை வகைகளும் கிடையாது.அத்தனை வகைகளும் இங்கு வளரவும் செய்யாது.[இதற்கு மேல் உருளைக் கிழங்கு பற்றிய விபரங்களுக்கு எழுத்தாளர் ஞானியை அணுகவும்.அவர் உருளைக் கிழங்கு மகாத்மியம் என்ற காவியம் இயற்றி வருவதாய்க் கேள்வி]

வாழைப் பழம் போன்று பல்வேறு தாவரங்கள் குறிப்பாக மூலிகைகளின் தாயகம் பொதிகையே.உலகின் முக்கியமான பல்லுயிர்த் தொகுதி மையங்களில் பொதிகை மிக முக்கியமானது.இமய மலையில் கிடைக்காத மூலிகைகள் அவற்றின் பல்வேறு வகைகள் பொதிகையில் மட்டுமே கிடைக்கின்றன.இதுவே சித்தர்களையும் அகத்தியரையும் பொதிகை நோக்கி வரச் செய்த காரணம்.ஞானம்  வேண்டுமெனில் மலைக்குப் போ என்று ஒரு சொல் உண்டு.அதற்குப் பல காரணங்கள்  உண்டு.ஒன்று மக்கள் கூட்டத்திடமிருந்து விலகுவது.இரண்டாவது சுத்தமான நீர்.காற்று போன்றவை .மூன்றாவது மூலிகைகள்.

ஞானம் அடைவதற்கு மூலிகைகள் அவசியமா என்று கேட்கிறீர்களா..சித்தர்கள் நோக்கில் அவசியம்..மற்ற ஞானியாரைப் போல சித்தர்கள் மரணத்தை இறைவனது மீற முடியாத கட்டளையாகப் பார்க்கவில்லை.ஒவ்வொரு தடவையும்  பிறந்து இறந்து அலைவதையோ அல்லது இறைவனது இறுதித் தீர்ப்பு நாளுக்காய் வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருப்பதையோ அவர்கள் விரும்பவில்லை.முக்தி அல்லது முழு ஞானம் அடையும் வரை மரணம் அண்டாமல் இருக்க வேண்டும் என்றே யோசித்தார்கள்.மரணமில்லாப் பெரு வாழ்வு என்பதை சாத்தியமற்ற ஒன்றாக அவர்கள் கருதவில்லை.அதற்கு பக்தி,யோகம் ,மூச்சுப்பயிற்சி இவை மட்டும் போதாது என்று அவர்கள் உணர்ந்தார்கள்.இயல்பிலேயே நம் உடலில் நிகழும் வளர் சிதை மாற்றத்தின் திசையை அவர்கள் சில மூலிகைகளால் மாற்றி அமைக்க முடியும் என்றுஅவர்கள் கண்டுகொண்டார்கள்.அந்த மூலிகைகளைத் தேடித்தான் அவர்கள் பொதிகைக்கு வந்தார்கள்.

இவ்வாறு மூலிகைகள்  மூலம் உடலை நிலைப் படுத்தி மரணமில்லாமல் இருக்கும் நிலைக்கு காயசித்தி என்று பெயர்.காயசித்திக்குப் பயன்படும் மூலிகைகள் கற்ப மூலிகைகள் என்று பெயர்.கற்பம் எனில் கோடி.கோடி ஆண்டுகள் வாழவைக்கும் மூலிகைகள்!மூலிகைகளையும் ரசத்தையும் வேறு தனிமங்களையும் பயன்படுத்தி இந்த கற்பங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் சித்தர் பாடல்களில் கொட்டிக் கிடக்கின்றன.ஆனால் எல்லாவற்றையும் அப்படியே நம்பி இறங்கிவிடுவது ஆபத்து.முதலில் அவர்கள் தங்கள் பாடல்களில் பெரும்பாலும் பரிபாசை யையே பயன்படுத்தி இருக்கின்றனர்.குரங்குக் கை என்று எழுதி இருப்பதை நம்பி குரங்கின் பின்னால் கத்தியுடன் அலைவதோ சிங்கத்தின் சிறுநீர் என்று சொல்வதை அப்படியே நம்பி சிங்கம் எப்போது உச்சா போகும் என்று அதன் பின்னால் பாத்திரத்துடன் அலைவதோ கூடாது.இவையெல்லாம் மூலிகைகளின் பெயர்கள்.சில சமயங்களில் ஒரே மூலிகையை பல பேர்களில் சொல்லுவதும் உண்டு.அவற்றையெல்லாம் இனம் கண்டறிந்து தேடிக் கண்டு பிடிக்கவேண்டும்.இன்றைக்கு பொதிகை மலை இருக்கிற இருப்பில் மூலிகைகள் கிடைப்பதை விட மலை உச்சிகளில் பல்வேறு விதமான பிராந்திக் கோப்பைகள் கிடைப்பதே எளிதாக இருக்கும்.

ஒருவேளை உங்கள் ஊழ்வினைப் பயனால் இந்த மூலிகைகள் எல்லாம் கிடைத்து கற்பம் செய்துவிட்டதால் போதாது.அதை உண்ணுவதற்கு மிகக் கடுமையான பத்தியங்கள் உண்டு.காலையில் கற்பம் சாப்பிட்டுவிட்டு மலையில் பிட்சா சாப்பிடலாம் என்று நினைக்கக் கூடாது.உப்பு,புளி.காரம் .இவை எல்லாம் சேர்ந்த பெண் எதையுமே தொடக் கூடாது.தொட்டால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!

உண்மையில் அது மறுபிறப்பு போன்றதே.கற்பங்கள் சாப்பிடும் போது பூமிக்குள் ஆழக் குழி தோண்டி கண்காணாது வசிப்பதே நல்லது எனச் சொல்லப் படுகிறது.ஏனெனில் அந்த சமயத்தில் 4444 வகை நோய்கள் தாக்கும் என்று சொல்லப்படுகிறது.அவற்றிடம் இருந்து தப்பிக்கவே இந்த பங்கர் வாசம்.கற்பம் சாப்பிட சாப்பிட உங்கள் தேகம் முழுக்கவே மாறுகிறது.பாம்பு சட்டையை உரிப்பது போல் உங்கள் பற்கள் நகங்கள் கூட உதிர்ந்து மீண்டும் முளைக்கின்றன!இறுதியில் கிடைக்கிறது உங்களுக்கு ஒரு மரணமில்லா ஒளிதேகம்.

சதுரகிரி மலையின் இன்னும் கண்டுபிடிக்காத குகைகளின் ஆழத்தில் இது போல் கற்பம் சாப்பிட்ட  அப்ரெண்டிஸ் சித்தர்கள் நிறைய பேர் அறிதுயிலில் இருப்பதாகவும் அந்த குகைகளை பூதங்களும் கருப்பணசாமியும் காவல் காப்பதாகவும் தகவல்.இது போல் அப்ரெண்டிஸ் சித்தர்கள் பயிலும் பள்ளி ஒன்றை சதுரகிரி மலையில் அகத்தியர் நடத்துவதாகவும் கேள்வி!

Monday, August 16, 2010

மர்மயோகி அகத்தியர் 10

அவலோகிதேஸ்வரர் என்பவர் பௌத்த மதத்தின் முக்கியமான போதிசத்துவர்களில் ஒருவர்.போதிசத்துவர்கள் என்பவர்கள் புத்தரின் பரிநிர்வாண நிலையை அடைந்தவர்கள்.நமது அவதாரங்கள்,கிறித்துவத்தின் தீர்க்கதர்சிகள் ,இஸ்லாமின் நபிகள் போன்று சொல்லலாம்.பௌத்தத்தில் ஒரு முக்கியமான போதிசத்துவர் இவர்.தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகம் வழிபடப் படுகிறார்.இவரைப் பற்றி அதிகம் வரலாற்றுச் செய்திகள் கிடைக்கவில்லை.ஆனால் இவர் தான் நிர்வாணம் அடைந்துவிட்டாலும் உலக உயிர்கள் அத்தனையும் உய்யும்வரை அவர்களை வழிகாட்டுவதற்காக இந்த உலகிலேயே பொட்டிகால என்ற மலையில் இன்றும் இருக்கிறார் எனச் சொல்லப் படுகிறது.கதை வேறெங்கோ திசை திரும்புகிறதே என்று நினைக்கிறீர்களா.இல்லை.இந்த பொட்டிகால மலை வேறு இல்லை.நமது பொதிகை மலைதான்!இவ்வாறு நான் சொல்லவில்லை.shu hikosaka என்ற ஜப்பானிய அறிஞர் சொல்கிறார்.இனி அடுத்த குண்டு.இந்த அவலோகிடேச்வரர்தான் அகத்தியருக்கு பொதிகை மலையில் வைத்து தமிழ் கற்றுக் கொடுத்தார் என்கிறார் இவர்!

தமிழ்நாட்டில் சமணம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன.அந்த அளவு பௌத்தம்  பற்றி தெரியவில்லை. ஆனாலும் ஆங்காங்கே சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.அசோகரின் புத்திரிகள் இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்ப தென்தமிழகம் வழியாகத் தான் சென்றிருக்கவேண்டும்.ஆனால் இந்த அவலோகிடேச்வரர் என்று சிவனைத் தான் குறிப்பிடுகிறார்கள் என சந்தேகம் உண்டு.கடைசியில் உள்ள ஈஸ்வர் என்ற விகுதியைக் காண்க.மேலும் அவலோகிடேச்வரின் இன்னொரு பெயர் சண்டி!சண்டிகேஸ்வரரை நினைவில் கொள்க.இது போல் கடவுள்களைப் பரிமாற்றம் செய்து கொல்வது ஒன்றும் புதிதல்ல.ஹிந்து மதத்தில் உள்ள சரஸ்வதி,தாரா,விநாயகர் போன்ற தெய்வங்கள் சமணத்திலும் பௌத்தத்திலும் உண்டு.சிவன் மாரனை[மன்மதன்]எரித்த கதை பௌத்தத்தில் புத்தர் மாரனை வென்ற கதையாகச் சொல்லப் படுகிறது.ஆனால்  இங்கு மாரன் கிறித்துவம் கூறும் சாத்தானைப் போன்றவன்!நிர்வாண நிலை அடையாமல் உயிர்களை தனது மாயையால் தடுப்பவன்.நாம் கூறவந்தது இதுவல்ல.பௌத்தமும் அகத்தியர் என்ற தொன்மத்தை குறிப்பிடத் தக்கதாக கருதி இருக்கிறது என்பதைச் சுட்டவே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் பொதிகைமலைக்கும் உள்ள பிணைப்பு  பற்றி நிறைய தொன்மங்கள் உலவுகின்றன.ஆதியில் சிவன் வியாசரை சமக்ரிதத்தையும் அகத்தியரை தமிழ் மொழியையும் உருவாக்குமாறு பணித்து அனுப்பி வைத்தார் என்று புராணங்கள் கூறும்.தெற்கே வந்த அகஸ்தியருக்கு தமிழ்க் கடவுளான முருகனே தமிழைக் கற்பித்தான் என்பது இன்னொரு தொன்மம்.ஆகவே தெய்வத்தால் கற்பிக்கப் பட்டது என்ற தர்க்கப் படி தமிழும் தேவ பாஷையே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு சர்ச்சைக்குரியது.ஒரு ஆரியர் தமிழைத் தோற்றுவித்தார் என்பதை நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம்.ஆனால் இந்த தொன்மத்தை திரும்ப திரும்ப நாம் சந்திக்க நேரலாம்.தமிழில் கிடைத்த  ஆதி நூலை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் சீடர் எனப் படுகிறது.ஆனால் தொல்காப்பியத்தில் ஒரு வரி கூட அகத்தியரைப் பற்றிக் கிடையாது!ஆனால் அதற்கும் ஒரு தொன்மம் காரணமாகச் சொல்லப்படுகிறது.தொல்காப்பியர் உட்பட்ட தனது சீடர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் தனது குருவான அகத்தியரையும் அவர் எழுதிய அகத்தியத்தைப் பற்றியும் குறிப்பிடவில்லை என்று அந்த கதை சொல்கிறது.அகத்தியர் இது போல் சீடர்களுடன் முரணுவதில் பேர் பெற்றவரே.ஆனால் இதை வேறு கோணத்தில் அணுகலாம்.வியாசருக்கு முன்னால் வடமொழியோ அகத்தியருக்கு முன்னால் தமிழோ இல்லை  என்று இதற்கு பொருள் கொள்ளத் தேவை இல்லை. இன்றைய வடமொழியின் இலக்கணம் முழுதும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாணினியால் எழுதப் பட்டுவிட்டது.இது போன்ற ஒரு இலக்கணத்தை அகத்தியர் செய்திருக்கலாம்.தமிழ் மொழி காலம் தோறும் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.பெரியார் சமீபத்தில் செய்தது ஒரு சிறிய உதாரணம்.எழுத்து முறைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது உண்மையே.ஆனால் புணர்ச்சிவிதிகள் விகுதிகள் திணைகள் போன்ற அடிப்படை விதிகளில்  பெரிய மாற்றங்களைச் சந்தித்திருக்கிறதா என்பது கேள்வி.அது தேவையும் இல்லை.இவ்வாறு அடிப்படை விதிகளில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டிருந்தால் மொழி அழிந்துவிடும் அபாயம் உண்டு.ஆகவே இது போன்ற இலக்கணங்களை வகுத்துக் கொடுத்தவர்களையே அம் மொழியை உருவாக்கியவர் எனச் சொல்லும் உயர்வு நவிற்சி கதைகள் உருவாகி இருக்கலாம்.அகத்தியர் -தொல்காப்பியர் -தமிழ் மொழியின் தோற்றம் என்ற  தொன்மத்தின் காரணம் இதுவாகவே இருக்கலாம்.

ஆனால்  அகத்தியர் பொதிகைக்கு வந்ததன் காரணம் மொழி மட்டுமல்ல.

Tuesday, August 3, 2010

மர்மயோகி அகத்தியர் 9

பரசுராமரைப் போலவே அகத்தியரும் நல்லதொரு போர்வீரர் என்று ராமாயணம் கூறுகிறது!துரோணரின் ஆசிரியர் அகத்தியர் என்றே சொல்லப்படுகிறது.தன்னைச் சந்திக்க வந்த ராமனிடம் தனக்கு விஷ்ணு வழங்கிய ஒரு வில்லை அகத்தியர் பரிசாக வழங்கினார்.
அகத்தியரைப் பற்றி பிரபலமாக வழங்கப் படும் கதை அவர் ஏன் தெற்கே வந்தார் என்ற கதை.இமய மலையில் சிவன் பார்வதி திருமணம் நடை பெற்ற போது வந்திருந்த விருந்தினர்க் கூட்டத்தின் சுமை தாங்காமல் வட கோடு தாழ்ந்து தென் கோடு உயர்ந்தது.அதைச் சமப் படுத்தவே அகஸ்தியரை சிவன் தெற்கே அனுப்பி வைக்கிறார்.இந்தக் கதையின் பின்னால் ஒரு புவியியல் வரலாறும் ஒளிந்திருக்கிறது .

நமது புவி காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது.சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையைப் போல பல்வேறு ஊழிகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது.முன்பிருந்த நிலப் பரப்புகள் இன்று கடலுக்கடியில் உள்ளன.கடலுக்க்கடியில் இருந்தவை நிலப் பரப்புகளாக உள்ளன.இந்த மாற்றங்கள் பற்றி விவிலியத்திலும் பல்வேறு நாட்டு புராணங்களிலும் நிறையப் பேசுகிறார்கள்.சில நாகரிகங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன .இவற்றைப் பற்றி பல வாய்மொழிக் கதைகள் உலவுகின்றன.அவற்றில் இரண்டு பெருங்கதைகள் உண்டு.ஒன்று நமது குமரிக் கண்டம்.மற்றதின் பெயர் அட்லாண்டிஸ்.[இது பற்றி ஒரு அமெரிக்க ரிஷியில் எழுதுகிறேன்.மிக சுவராஸ்யமான கதை அது]

குமரிக் கண்டம் ஒரு கட்டுக் கதையே என்பவர் உண்டு.தமிழருக்கு இயல்பிலேயே உள்ள தற்பெருமை உணர்வை மேடம் பிளாவட்ச்கியின் பிரம்மா ஞான சபையின் சில கருதுகோள்கள் விசிறிவிட்டதில் விளைந்த கற்பனை என்பார்கள்.இருக்கலாம்.இங்கு நாம் செய்வது ஆராய்ச்சி அல்ல.அகத்தியருடன் இணைந்து பேசப்படும் சில தொன்மங்களைப் பேசுகிறோம் அவ்வளவே.ஆனால் எந்த தொன்மமும் முழுமையாக கற்பனையில் இருந்து வந்துவிட முடியாது.

குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம் அதில்.வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.

முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்தார்.இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்கிறார்கள்.என்ன ஆராய்ச்சி?ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாக இருக்கலாம்.

ஏன் என்று சொல்கிறேன்.நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான் [faultlines]பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.நமது தென்தமிழகத்தில் காணப் படும் ஒரு பிளவுக் கோடு தோரணமலை அடியாகவே செல்கிறது.அது தோரண மலைப் பிளவு என்றே அழைக்கப் படுகிறது.!ஆனாலும் இந்த பகுதியில் இதுவரை பூமி அதிர்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பட்ட்ட்டதே இல்லை.
சரி.அகத்தியர் தெற்கே வந்த கதைக்கு வருவோம்.இமய மலை ஒரு காலத்தில் கடலுக்குள்  இருந்தது .அறிவீர்களா.அதன் சிகரங்களில் திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன!தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத் தொடர்கள் ,சஹாரா பாலைவனங்கள் இவை எல்லாம் கடலுக்குள் இருந்தவையே.இதே போல் பல நிலப் பரப்புகள் கடலுக்கு உள்ளே வெளியே வந்து போய் இருந்திருக்கின்றன. மிகச் சில பகுதிகள் மட்டுமே எப்போதும் புவியின் மேற்பரப்பிலேயே இருந்திருக்கின்றன.இவையே பூமியின் பழமையான நிலப் பரப்புகள்.இந்தியாவைப் பொறுத்தவரை விந்தியமலைக்குத் தெற்கே உள்ள தக்காண பீடபூமி பகுதிதான் அது.கோடு என்றால் மலை என்று பொருள்.இப்போது வடகோடு[இமயம்] தென்கோடு [விந்திய மலை]'உயர்ந்து இருக்கும் கதையின் பின்னால் உள்ள தத்துவம் புரிகிறதா..இந்த தக்காண பீடபூமியிலும் பொதிகைக்கு சிறப்பாக அகத்தியரும் பிற சித்தர்களும் ஏன் ஈர்க்கப் பட்டார்கள் என்று அடுத்து பார்க்கலாம்.

Monday, July 5, 2010

மர்ம யோகி அகத்தியர் 8

அகத்தியர்தான் ஆரிய கலாச்சாரத்தை முதல் முதலாய் திராவிடத்துக்கு கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கக் கூடும்.நாம் தந்தை வழிச்  சமூகமாக இருப்பதற்கு முன்பு நெடுங்காலம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தோம்.அன்று நமது தெய்வங்களும் தாய்த் தெய்வங்களாகவே இருந்தன.கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தானோ என்னவோ மனிதன் தன்  சாயலில் தான் கடவுளைப் படைத்தான்.ஒரு சமூகம்  வணங்கும் கடவுள்கள் அவர்களது கலாச்சாரத்தின் குறியீடாகவே இருக்கும்.

சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் முன் நாம் இந்திரனையும் அக்னியையும்தான் வணங்கினோம்.இவர்கள் வேத கால கடவுள்கள்.ஆனால் அதற்கு முன்னால் நாம் சக்தி வழிபாட்டையே செய்து வந்தோம்.நமது சங்க நூல்களில் பழையோள் என்றே கொற்றவை[காளி]குறிப்பிடப் படுகிறாள்.

இங்கு மட்டுமல்ல,உலகெங்கும் தாய்த் தெய்வங்களே வழிபடப் பட்டன.இசிஸ்,அஸ்தார்த் போன்ற பெண்தெய்வங்களே எகிப்திலும் இஸ்ரேலிலும் மோசஸ் வருவதற்கு முன்பு வழிபடப்பட்டன.

ஆனால் தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக மாறியபின்பு இந்த தெய்வங்கள் புறக்கணிக்கப் பட்டன.மேலும் இந்த பெண் தெய்வங்களை சாதாரண பொருட்களைக் கொடுத்து 'திருப்திப்' படுத்த முடியவில்லை.அவர்களுக்குச் செய்யும் சடங்குகளில் நிறைய காமமும் வன்முறையும் இருந்தன.மனிதர்கள் ஒரு சமூகமாக உருவாவதற்கு இந்த இரண்டையும் ஒழுங்கு படுத்த வேண்டிய அவசியம் இருந்தது.

செமிடிக் மதங்கள் உண்மையில் தாய்த் தெய்வங்களை சாத்தான் வழிபாடு என்று பயமுறுத்தி முழுக்கவே ஒழித்துக் கட்டிவிட்டன.அவர்களின்  தேவ லோகத்தில் ஒரு பெண் கடவுள் கூட கிடையாது.ஏன் ஒரு பெண் தீர்க்கதரிசி கூட கிடையாது.

ஆனால் இந்தியாவில் சக்தி வழிபாட்டை அத்தனை எளிதில்  ஒழிக்க முடியவில்லை.வேதங்களில் இந்திரனும் அக்னியும் தவிர ருத்திரனும் குறிப்பிடப் படுகிறான் எனினும் ஒரு பயத்தோடுதான் அவனைப் பற்றி பேசுகிறார்கள்.தேவர்களைப் போல் அவன் முழுக்க 'நாகரிக'மானவன் அல்ல.எப்போதும் சுடுகாட்டில் பூத கணங்களோடு திரிந்து கொண்டிருந்த அவனையும் சதா உயிர்ப் பலி வேண்டி நிற்கும் சக்தியையும் வேத முறைப் படி கல்யாணம் பண்ணி வைத்து 'சாந்தி' பண்ணினார்கள்.இந்த கல்யாணத்துக்கு தேவர்கள் அனைவரும் வந்திருந்ததும் இந்த சமயத்தில் தான் அகத்தியர் தெற்கே அனுப்பப் படுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அகத்தியர் தெற்கே வந்ததும் அதே பாணியில் தான்தோன்றியாய் திரிந்து கொண்டிருந்த நிறைய உக்கிர தேவிகளைப் பிடித்து  கல்யாணம் பண்ணிவைத்து சாந்தப் படுத்தி வைத்தார்.தந்தை வழிச் சமூகத்தின் சின்னமான லிங்கங்களை எல்லா இடங்களிலும் ஸ்தாபித்தார்.தாந்திரிக வழிபாடு முறைகளான நரபலி போன்ற விசயங்கள் மென்மைப் படுத்தப் பட்டு தேங்காய் உடைப்பது குங்குமம் தருவது போன்ற குறியீட்டுச் சடங்குகளாக மாற்றப் பட்டன.தாந்திரீக சடங்குகளை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அதே சமயம் வேதத்திலும் முற்றிலும் விலகிவிடாமல் ஆகம முறைகள் உருவாகப் பட்டு  பயன் பாட்டுக்கு கொண்டு வரப் பட்டன.

இதே போல் ஒரு வேலையைத்தான் கேரளத்தில் பரசுராமரும் செய்தார் என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது.தமிழகத்தில் அகத்தியருக்கு இருக்கும் அதே இடம் கேரளத்தில் பரசுராமருக்கு இருக்கிறது.கேரளமே பரசுராம ஷேத்திரம் என்றுதான் அழைக்கப் படுகிறது.காடாக இருந்த கேரளத்தை நாடாக 'மாற்றியவர் 'என்று அவர் கருதப் படுகிறார்.அதேபோல் ராவணனுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள உறவை போல் மகாபலிக்கும் கேரள மக்களுக்கும் உள்ள உறவும் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

Saturday, July 3, 2010

ஒரு அமெரிக்க ரிஷி 1

தொண்ணூறுகளில் வாழ்வின் ஒவ்வொரு முகமும் பயமுறுத்த எந்த நிலத்திலும் காலற்று ஜெயமோகன் தனது கதைகளில் சொல்வதுபோல் சிறிய உடம்பும் பெரிய தலையுமாய் இலக்கற்று பெருங்காற்றில் அலையும் பாலிதீன் குப்பைபோல் திரிந்த நாட்கள் ஒன்றில் அந்த புத்தகம் கிடைத்தது.ஏறக்குறைய கிணற்றில் மூழ்க இருந்தவனுக்கு கடைசிக் கணத்தில் கிடைத்த கயிறு.அல்லது வீசப்பட்ட கயிறு.ஏறக் குறைய இருபது வருடங்கள் ஆகிவிட்டது.புரட்டிப் புரட்டிப் பழுப்பேறிப் போன பக்கங்களில் இருந்து இன்னமும் அவ்வப்போது ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.அது ஒரு வாழ்க்கை வரலாறு.காலத்துக்குப் பொருந்தாத ஒரு ஞானி [A seer out of season] என்ற அந்த நூல் Harmon Hartzell Bro என்பவர் எழுதியது.
புத்தகத்தின் நாயகன் பெயர் எட்கார் கேசி [Edgar Cayce].பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அமெரிக்கர்.அவர் வாழ்ந்த நாட்களில் ஆயிரக் கணக்கான மனிதர்களை நோயிலிருந்தும் மரணத்தில் இருந்தும் காப்பாற்றியவர் .ஆனால் அவர் ஒரு மருத்துவர் அல்ல.


உடலை மட்டும் அல்ல ,மனிதனின் மனத்தையும் ஆன்மாவையும் கூட அவரால் குணப் படுத்த முடிந்தது.ஆனால் அவர் ஒரு துறவியோ பாதிரியோ அல்ல. ஒரு தத்துவ ஞானியோ உளவியல் நிபுணரோ எழுத்தாளனோ கூட அல்ல.


சிலர் அவரை ஒரு மிஸ்டிக் என்றோ அதீத உணர்வாளர் [psychic] என்று சொல்லக் கூடும்.ஆனால் அவர் ஒரு ஆவி உலகத் தொடர்பாளர் அல்ல.[சில சமயங்களில் ஆவிகள் அவருடன் பேசியது உண்டு என்றாலும்]


நான் சிறு வயதிலிருந்தே கிறித்தவப் பள்ளிகளில் பயின்றவன்.என் சூழலிலும் கிறித்தவர்கள் அதிகம்.எனவே பிறப்பால் ஹிந்துவாய் இருந்தாலும் பண்டிகைகளில் பலகாரம் சாப்பிடுவது வரை தான் இந்திய மற்றும் இந்து சிந்தனைகளோடு பரிச்சயம்.ஆனால் விவிலியம் என்னோடு கூடவே இருந்தது.கிறித்து எனக்கு அணுக்கமான நபர். அன்று வாழ்வைப் பற்றிய எனது நோக்கு நிச்சயமாய் கிறித்துவத்தின் நோக்குதான்.நான் கிறித்துவனாக மதம் மாறாவிட்டால் கூட.
ஆனால் வயது ஏற ஏற அந்த நிச்சயம் குறைந்து கொண்டே வந்தது.எனக்குப் போதிக்கப் பட்ட கிறித்துவத்தில் நிறைய ஓட்டைகள் தெரிய ஆரம்பித்தன.இந்த சமயத்தில் தான் இந்து சிந்தனை  நோக்கி திரும்பினேன்.சித்பவனந்தாவின் கீதை விளக்க நூலை ஒரு இருபது தடவையாவது படித்திருப்பேன்.சில புதிர்கள் விடுபடுவது போல் தோன்றியது.இன்னும் படிக்க படிக்க இந்திய தத்துவம் கிறித்துவ சிந்தனையை விட ஆழமாக செல்வதை உணர முடிந்தது.


ஆனால் என்னால் கிறிஸ்து என்ற நபரை முழுக்க ஒதுக்க முடியவே இல்லை.எனக்கு இந்து தத்துவத்தில் இருந்த ஈர்ப்பு அதன்  சடங்குகளில் அத்தனை இல்லை.கிறிஸ்து தந்த இறை உணர்வை கிறித்துவம் தரவில்லை.கொஞ்ச நாள் இரண்டையும் விட்டு விட்டு நிரீச்வரவாதியாக அலைந்தேன்.ஜேகிருஷ்ணமூர்த்தி படித்துவிட்டு பேஸ்த் அடித்தவன் மாதிரி திரிந்தது நினைவு வருகிறது.பெரியார் சிந்தனைகளுடன் பரிச்சயம் இருந்தாலும் ஜேகேதான் அவரைவிட பெரிய நிராகரிப்பாளர் என தெரிந்தார்.


உலகில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் இருந்தாலும் அவை யாவும் இரண்டு மையப் பார்வையையே கொண்டிருக்கின்றன.ஒன்று நமது இந்திய சிந்தனைப் போக்கு.இந்து மதம்,சமணம்,பௌத்தம் எல்லாம் இதில் அடங்கும்.மற்றொன்று செமிடிக் எனப்படும் மத்தியக் கிழக்கில் தோன்றிய சிந்தனைப் போக்கு.யூத மதம்,கிறித்துவம்,இஸ்லாம் போன்ற மதங்கள் இந்தப் பிரிவில் வரும்.கிரேக்கச் சிந்தனை ,பேகன் [pagan] சிந்தனை மற்றும் சீன சிந்தனைப் போக்குகளும் உண்டு எனினும் அவை இந்த இரண்டு பெரிய சிந்தனைப் போக்குகளின் பாதிப்புகள் உள்ளவையே.


மேல்நோக்கில் இந்திய சித்தாந்தமும் செமிடிக் சித்தாந்தமும் முற்றிலும் எதிர் எதிர் நிலைகளில் நிற்பது போல் தோன்றும்.ஆனால் இந்த தோற்றம் மாயையே என்று எனக்கு மெதுமெதுவாக புரிய ஆரம்பித்தது.கிறித்துவும் கீதையும் ஒரே இடத்தில் இருக்க முடியாதா  என இந்த புத்தகம் மூலமே நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.


எட்கார் கேசியை வேத கால ரிஷிகளுடன் ஒப்பிடலாம் ரிஷி என்றால் பார்ப்பவன் என்று அர்த்தம்.[அதைத் தான் நாம் பாப்பான் ஆக்கிவிட்டோம்]நம் கண்ணுக்கு தெரிகிற காட்சிகளின் பின்னால் அசைகிற திரைகளை விலக்கிப் பார்க்கத் தெரிந்தவனே ரிஷி.பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிந்தவன்.ஆகவே தமிழ் இவனை அறிவன் என்று அழைக்கும்.


ஆனால் ரிஷிகளைப் போல் தவமோ யோகமோ செய்யவில்லை.[ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவரே எனினும்]திரைகள் அவருக்கு திறக்கப் பட்டன.பிரபஞ்சத்தின் அத்தனை ரகசியங்களும் அவருக்கு ஒவ்வொன்றாய் காட்டப் பட்டது.தீராத நோய்களைக் குணப் படுத்தினார்.மனிதர்களின் முந்தைய வாழ்க்கைகளைப் பற்றி சொன்னார்.காலம் மறைத்துவிட்ட சரித்திரங்களை  வெளிக் கொண்டுவந்தார்.ஆனால் எல்லாம் அவரது உறக்கத்தில்!
ஆம்.அமெரிக்கா அவரை தூங்கும் தீர்க்கதரிசி என்றுதான் அழைத்தது.


யார் இவர்?

Sunday, June 27, 2010

மர்மயோகி அகத்தியர் 7

உலகம் அணுக்களால் ஆனது என்ற கருதுகோள் ஒன்றும் புதிய கருத்து அல்ல.குறைந்தது  2000 வருடங்களாவது இந்த கருத்து மனிதனை வசீகரித்து வந்திருக்கிறது.இந்த அணுக்களின் அமைப்பை மாற்றுவதன் மூலம் நாம் விரும்பும் வகையில் பிரபஞ்சத்தையும் அமைத்துக் கொள்ளலாம்.என்ற கருத்துதான் சித்தர்களை ரசவாதம் நோக்கி ஈர்த்திருக்க வேண்டும்.முன்பே சொன்னது போல சித்தர்கள் மதவாதிகளைப் போல இந்த பிரபஞ்சம் அதன் அத்தனை விதிகளுடனும் முழுமையாக கடவுளால் படைக்கப் பட்டு வெளியிடப் பட்டது என்பதை நம்பவில்லை.தொடர்ச்சியாக இந்த பிரபஞ்சத்தில் மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்ய இயலும் என்றே நம்பினார்கள்.இன்றைய அறிவியலும் ஏறக்குறைய இதே நோக்கில் தான் செயல்படுகிறது .இல்லையா?[மென் பொருட்களுக்கு புதிது புதிதாய் பதிப்புகள் வருவது போல.]ஆனால் அவர்கள் இறை என்ற விஷயத்தை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எல்லாவற்றுக்கும் ஆதாரமான பொருளை இறைதான் படைக்கிறது.சில சித்தர்கள் அதில் கூட வேறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தனர்.விஸ்வாமித்திரர் திரிசங்கு சொர்க்கம் படைத்தது போல சித்தர்களின் சில செயல்கள் பிரம்மனையும் சிவனையுமே  கலவரம் அடையச் செய்ததாக கதைகள் கேட்கலாம்.சில பிரபஞ்ச ரகசியங்களை வெளியிடக் கூடாது என்று சில சித்தர்களுக்கு சித்தர் குழாமால் அழுத்தம் தரப் பட்ட செய்திகளை அறியமுடிகிறது.இந்த மாதிரி விசயங்கள் தீயவர் கைகளில் சேர்ந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்திருக்கின்றனர்.இந்த காரணம் கொண்டே அவர்கள் நூல்களை சந்தி பாஷையில் எழுதி வைத்தனர்.
இன்றைய அறிவியல் ஏறக் குறைய இதே நோக்கில்தான் நகர்கிறது.அறிவியலும் பிரபஞ்சத்தின் அமைப்பு அணுக்களினால் ஆனது என்கிறது.அதன் அமைப்பை மாற்றுவதன் மூலம் பெரும் சக்தி கிடைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறது.ஆனால் அந்த சக்தி தீவிரவாதிகள் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காய் படாத பாடு படுகிறது.ரசவாதத்தின் மூலம் சித்தர்கள் சாதாரண உலோகங்களை தங்கமாக்கினர்  எனப் படுகிறது.நவீன அறிவியலின் மூலமும் இதை செய்யமுடியும்.என்ன தங்கத்தின் விலையை விட அதிகம் செலவாகும் .சித்தர்கள் இந்த காரியத்தை மூலிகைகள் மூலமும் பாதரசம் போன்ற தனிமங்கள் மூலமும் சாதித்தனர்.அதாவது இயற்கையில் உள்ள பொருட்களையே எடுத்து இயற்கையை வளைத்தனர்.

இதே நோக்கில்தான் அவர்கள் மனித உடலையும் அணுகினர்.அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்பது அவர்கள் நோக்கு.அதாவது பிரபஞ்சமும் மனிதனும் ஒரே விதிகளால் ஆனவர்கள்தான்.புற உலகில் உள்ள எல்லா விசயங்களும் மனித உடலுக்குள்ளும் இருக்கின்றன.அதாவது சிறிய அளவில்.புற உலகில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதம் மனிதனைப் பாதிக்கிறதோ அது போல் மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மூலம்  புற உலகையும் பாதிக்கலாம்.சித்தர்களின் சித்து விளையாட்டுக்களின் அடிப்படைத் தத்துவம் இதுவே.

 இன்னும் விளக்குகிறேன்.தங்கம் போன்ற பல  உலோகங்கள் நமது உடலிலும் உள்ளன .[சிறிய அளவில்]சித்தர்கள் ஆணின்  விந்தையே பாதரசமாக சொல்வார்கள்.பெண்ணின் சுரோணிததை கந்தகமாகக் கொள்வார்கள்.இரண்டும் எதிர் எதிர் நிலைகள்.ஆனால் இரண்டும் இல்லாமல் படைப்பு நிகழாது.ஆனால் பாதரசம் அப்படியே பயன் படாது.அந்த நிலையில் அது கடும் விஷம்.அதை சுத்தம் செய்து மாற்ற வேண்டும்.பாதரசத்துக்கு ஏழு சட்டைகள் உண்டென சித்தர் பாஷையில் சொல்வார்கள்.அதாவது ஏழு மாசுகள்.அவை எல்லாவற்றையும் சுத்திகரித்த பிறகே அது ரசவாதத்துக்கு பயன்படும்.அதே போலதான் விந்தும் .சித்தர்களின் உடற்கூறு படி மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனது.நாம் உண்ணும் உணவு ரத்தம் மாமிசம் என்று ஒவ்வொரு தாதுவாய் மாற்றம் பெற்று வந்து  ஏழாம் மற்றும் கடைசித் தாதுவான விந்தாய் மாறுகிறது!புரிகிறதா?சித்தர்கள் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று ஏன் சொன்னார்கள் என்று?

இந்த காரணம் கொண்டே சித்தர்கள் மருத்துவத்திலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தினார்கள்.ரசவாதத்தில் பயன்படும் அதே மூலிகைகளையே மருத்துவத்திலும் பயன் படுத்தினார்கள்.விந்தையும் சுரோணிததையும் காம மற்றும் ஜனப் பெருக்க காரியங்கள் தவிர வேறு உத்தேசங்களுக்கும் பயன் படுத்தலாம் என்பது அவர்கள் துணிபு.

Thursday, June 10, 2010

மர்ம யோகி அகத்தியர் 6

இந்த போகர் இன்னும் ஒரு சுவராஸ்யமான சித்தர்.அகத்தியருக்கு அடுத்தபடி தமிழ் நாட்டில் மிக அறியப் பட்ட சித்தர் போகர் தான்  எனலாம்.ஆனால் அகத்தியர் போல புராணங்களில் இதிகாசங்களில் எல்லாம் காணப் படவில்லை.இவரது வரலாற்றிலும் நிறைய முரண்பாடுகள் உண்டு.அவர் சீனர் என்பது ஒரு கூற்று.இல்லை  இந்தியாவில் விஸ்வ கர்மா[கொல்லர் மற்றும் ஆசாரி] குலத்தில் பிறந்து சீனா சென்று திருமூலரைப் போல் போங் யான்க் என்பவர் உடலில் புகுந்து 12000 ஆண்டுகள் [!] உயிர் வாழ்ந்து நிறைய நூல்கள் சீனமொழியில் பல நூல்கள் எழுதி மீண்டும் தமிழ்நாடு வந்து பழனி தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தார் எனவும்  சொல்வர்.[சித்தர்கள் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து போராடிய சமூக சீர்திருத்த வாதிகள் என்ற படிமம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொரு சித்தரின் வரலாற்றிலும் மறக்காமல் அவர்களது ஜாதி குறிப்பிடப் படுகிறது.ஏறக்குறைய எல்லா சாதியிலும் இருந்து சித்தர்கள் தோன்றி உள்ளனர்.]

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்வது போன்ற நம்பச் சிரமப் படுத்தும் விசயங்கள் சித்தர்களிடம் நிறையவே உண்டு.ஆனால் விவிலியத்திலும் இது போல் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் வாழும் மனிதர் பற்றி தகவல் உண்டு.ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப் படுகிறது.அவனது முதல் குழந்தை பிறக்கையில் அவன் வயது 130 !படிப் படியாக மனிதரின் வாழ்நாள் குறைந்தது என விவிலியம் கூறுகிறது.காக புசுண்டர் யுகம் யுகமாக இருப்பதாக போகர் தனது போகர் 7000 நூலில்  கூறுகிறார்.இது போல் பல நம்ப கடினமான  செய்திகள் இந்நூலில் உண்டு.உதாரணத்துக்கு சீனாவில் ஒரு பிரதேச பெண்களுக்கு மாத விலக்கே வருவதில்லை என்கிறார்!இன்னொரு இடத்தில் தான் தயாரித்த ரசமணி கடலைக் குடித்தது என்கிறார்!தான் தயாரித்த ககனக் குளிகை எனப் படும் ரசமணி உதவியுடன்தான் அவர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அவர் ஆகாயப் பயணம் செய்கிறார்!

இந்த ககனக் குளிகை போலவே கமனக் குளிகை என்றும் ஒன்று உண்டு.கமனம் என்றால் உடல் உறவு.அந்த சமயத்தில் இதை இடுப்பில் கட்டிக் கொண்டால் விந்து வெளியேறவே செய்யாது என்று கூறப் படுகிறது.[இதை செய்து தருகிறேன் என்று நிறைய பேர் கோடீஸ்வரன் ஆகிவிட்டார்கள்] உண்மையில் சித்தர்கள் பாஷையில் பாத ரசம் சிவனின் விந்து என்றே அழைக்கப் படுகிறது.சக்தியின் நாதம் [மதன நீர்]கந்தகமாக உருவகிக்கப் படுகிறது.இரண்டும் இணைந்தால் தான் உயிரும் பிரபஞ்சமும் உருவாக முடியும்.ரசமும் கந்தகமும்  எதிர் எதிர் நிலைகள்.பாதரசம் குளிர்ச்சியானது.ஆண் தன்மை கொண்டது.கந்தகம் பெண்தன்மை கொண்டது.சூடானது. பெண்கள் உடலில் கந்தகச் சத்து அதிகம்.அதனால் தான் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விட சூடாக உள்ளது.


ரசவாதம் என்பது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.ஒரு வகையில் நவீன  வேதியியலின் முன்னோடி என சொல்லலாம்.பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் ஆனது என்ற கருத்து தோன்றிய உடன் வெகு சீக்கிரமே இந்த அணுக்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப செயற்கையாக மாற்றும் இச்சையும் மனிதனுக்கு தோன்றிவிட்டது.சித்தர்களுக்கும் மற்ற ரிஷிகள் தீர்க்கதரிசிகள் போன்றோருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இதுதான்.சித்தர்கள் இந்த பிரபஞ்சத்தை இறை படைத்தது என்று  வணங்கி விட்டு சும்மா இருந்து விட வில்லை.நவீன  அறிவியலாளர்கள் போல் அதை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள்.அவர்கள் மரணத்தைக் கூட இயல்பானது என்று ஒப்புக் கொள்ளவில்லை. மத ஞானிகளைப் போல் அவர்கள் உடலை வெறுத்து ஒதுக்க வில்லை.பெரு மதங்கள் உடலை இழிவானது என்றும்  ஞானம் அடைவதற்கு தடை என்றும் சொன்ன வேளையில்  உடலின் மூலமாகவே ஞானம் பெற முடியும் என்ற மாற்று சிந்தனையை வைத்தவர்கள் சித்தர்கள்.'உடம்பை முன்னம் இழுக்கு என்றிருந்தேன் .'என்ற திரு மூலர் பாடல் பிரபலம்.அதில் அவர் 'உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 'என்றே சொல்கிறார்.இதன் காரணமாகவே அவர்கள் மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
ரசவாதத்தை சங்க இலக்கியம் போல் அகம் புறம் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்ற முயற்சிப்பதை புற ரசவாதம் என கூறலாம்.பொருளாசை அதிகம் இல்லாத சித்தர்கள் இந்த விசயத்தில் அதிக ஆர்வம் காட்டியதற்கு காரணம் புதிராக இருக்கிறது.ஆனால் அவர்கள் எழுதிய ரசவாத நூல்களைப் படித்துவிட்டு தங்கம் செய்கிறேன் என்று சொத்தை அழித்தவர்கள் அதிகம் உண்டு.நான் மதுரையில் இருந்தபோது தங்கியிருந்த விடுதியின்   காவலாளி பற்றி இதே போல்  ஒரு கதை சொன்னார்கள்.அந்த விடுதியே முன்பு அவருடையது தானாம்.தங்கம் செய்கிறேன் பேர்வழி என்று எல்லா சொத்தையும் இழந்து இறுதியில் குடும்பத்தாலும் துரத்தப் பட்டு கடைசியில் தனது விடுதியிலேயே காவலராக காலம் கழிப்பதாக சொன்னார்கள்.அவர் எப்போதும் அனைவரும் தூங்கிய பிறகு சீரோ வாட்ஸ் பல்பின் மங்கிய ஒளியில் ஒரு பழுப்பு புத்தகத்தை கண்களை இடுக்கி படித்துக் கொண்டே இருப்பார்.ஒரு நாள் பகலில் அவர் இல்லாத சமயம் அந்த புத்தகத்தை பிரித்துப் பார்த்தேன். வேறென்ன..''பதினெண் சித்தர்களின் ரசவாத ஞானம்!''

 

Sunday, June 6, 2010

ரஸ்புடினும் நித்தியானந்தாவும் 1

சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்வில் நித்தியானந்தா பற்றிய  பழைய நிலைப்பாட்டுக்கு சாருவை மன்னிப்பு கேட்க வைக்க எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்ததில் அவர் ரஸ்புடின்,ஹீலிங் என்று தீனமாக முனகிக் கொண்டிருந்ததை யாரும் கவனித்தார்களா தெரியவில்லை .யார் இந்த ரஸ்புடின்?சாரு ஏன் அவரை இந்த விவாதத்திற்குள் கொண்டு வந்தார்?

கிரகோரி ரஸ்புடின் தோராயமாக 1860 களில் ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் பிறந்த துறவி [இந்த பகுதியில் இருந்துதான் ஓஷோவின் குரு குர்ட்ஜீபும் வந்தார்]ஒரு அண்ணன்.ஒரு தங்கை.அவளுக்கு வலிப்பு நோய் உண்டு.[இது ஒரு முக்கியமான விவரம்.மிஸ்டிக் என்று அழைக்கப் படும் அதீத உணர்வாளர்கள் பலருக்கு அல்லது அவர்கள் பரம்பரையில் பலருக்கு நரம்புச் சிக்கல்கள் இருந்திருக்கிறன]அவள் குளத்தில் மூழ்கி இறந்தாள்.சில நாட்கள் கழித்து ரஸ்புடின் தனது அண்ணனுடன் குளிக்க செல்கையில் அதே போன்று மூழ்கி காப்பாற்றப் பட்டாலும் அண்ணனின் நுரையீரலில் நீர் புகுந்து நிமோனியாவில் இறந்தான்.இந்த இரண்டு மரணங்களும் ரச்புடினை மிகவும் பாதித்தன.[இதுவும் ஒரு முக்கியமான கணணியே.இந்த அதீத உணர்வாளர்கள் பலருக்கு மரணம் தான் ஒரு திருப்பு முனையாக ,அவர்களை அக உலகு நோக்கி திருப்பும் விசையாக இருந்திருக்கிறது.பிரபல உதாரணம் புத்தர்.தான் தற்செயலாக வீசிய கயிற்றில் அடிபட்டு குருவி இறந்ததைப் பார்த்ததும் அதிர்ந்துதான் விசிறி சாமியார் ஞானம் தேடிப் புறப்பட்டதாக கேள்வி] பின்னால் அவரது குழந்தைகள் இருவருக்கு தனது சகோதரர்கள் பேரையே வைத்தார்.

சிறு வயதிலேயே ரஸ்புடின் காட்சிகள் காண ஆரம்பித்து விட்டார்.ஒரு திருட்டுக்கான தண்டனையாக  மூன்று மாதங்கள் ஒரு மடத்தில் தங்கி இருக்கையில் மேரி மாதாவின் காட்சியும் கிடைத்தது.அதன் பிறகு பதினெட்டு வயதில்  நமது தாந்திரீகம் போன்ற ஒன்றை கடைப் பிடிக்கும் ஒரு நாஸ்டிக் கிறித்துவ அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது.பிற கிறித்துவ அமைப்புகளைப் போல நாஸ்டிக் குழுக்கள் காமத்தை வெறுக்கவில்லை.மாறாக காமமும்  அவர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று .இந்த அணுகு முறையுடன் அவர் மகாரி என்ற தனது குருவைச் சந்தித்தார் .அதன் பிறகு கல்யாணம்.மூன்று குழந்தைகள் .திருமணத்திற்கு புறம்பாக இன்னொரு குழந்தையும் உண்டு!அதன்பிறகு கொஞ்ச நாள் ஜெருசலேம் கிரீஸ் என்று தலபிரயாணம்  எல்லாம் போனார்.பிறகு பீட்டர்ஸ்பர்க் வந்தார்.இப்போது அவர் முழு மிஸ்டிக்காய் மாறி இருந்தார்.

ஆறரை அடி உயரம்.கட்டுமஸ்தான உடல்.தோள்வரை தொங்கும் முடி.அடர்ந்த புருவங்கள்.மிக மிக கூரிய பார்வை.தலை நகர வாசிகள் அவரை பைத்தியக் கார துறவி
என்று அழைத்தாலும் அவர் மேல் ஒரு அச்சம் கலந்த மரியாதை இருந்தது.காரணம் அவனது தோற்றம் மட்டும் அல்ல.நோய்களைக் குணப் படுத்தும் அவனது அரிய ஆற்றல் .

கொஞ்சம் கொஞ்சமாக அவனது புகழ் அரண்மனை வரை பரவியது.காரணம் ஜார் மன்னனின் மகனுக்கு இருந்த ரத்தக் கசிவு நோய்.இளவரசனுக்கு லேசாக உராய்ந்தால் கூட ரத்தம் நிற்காமல் பெருகி எமலோகம் வரை எட்டிப் பார்க்காமல் போகாது. அந்தக் காலத்தில் இதற்கு மருந்து இல்லை.இதேபோல் ஒரு கையறு தருணத்தில் அரண்மனைக்கு அழைக்கப் பட்டான் ரஸ்புடின்.இளவரசனை காப்பாற்றினான்!அன்றில் இருந்து ரஷ்ய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஆனான் ரஸ்புடின்.ராணிக்கு மிக நெருக்கம் ஆனான்.ஒவ்வொரு அரசியல் முடிவிலும் அவன் பங்கு இருந்தது.விளைவு எதிரிகள்.ஒரு கட்டத்தில் அவனைப் போட்டுத் தள்ளிவிட முடிவு செய்தார்கள்.விருந்துக்கு அழைத்து கேக்கில் சயனைட் கலந்து கொடுத்தார்கள்.அவன் அதை சாப்பிட்டுவிட்டு கல் மாதிரி இருந்தான்.துப்பாக்கியால் சுட்டார்கள்.பயன் இல்லை.அவனைக் கத்தியால் குத்தி சாக்குப் பையில் கைகளைக் கட்டி அடைத்து நதியில் தூக்கி எறிந்தார்கள்.மறுநாள் அவனது பிணம் நதிக் கரையில் கிடைத்தது.ஆனால் அவன் சாக்குப் பையில் இருந்து எப்படியோ வெளிவந்திருந்தான்!


ரஸ்புடினது இன்னொரு பக்கம் தான் சுவையானது.ரஸ்புடின் ஒரு பக்கம் ஆன்மீகவாதி.தனது பிரார்த்தனைகள் மூலம் தீராத நோய்களைக் குணப் படுததிகிறவன்.மறுபக்கம் பெரிய குடிகாரன்.ஸ்திரீ லோலன்.அவனுக்கு மிகப் பெரிய ஆண்குறி இருந்தது என்று அவன் மகளே எழுதி வைத்திருக்கிறாள்..[அவனைக் கொலை செய்தவர்கள் அவன் உறுப்பை மட்டும் தனியாக வெட்டி வைத்துக் கொண்டார்கள்!அது மிகப் பெரிய விலைக்கு  போனது என்று வேறு சொல்கிறார்கள்!]அவனுடன் உறவு கொள்ளும் பெண்கள் உச்ச்சகட்டத்தில் மயங்கி விழும் அளவுக்கு மன்மதக் கலையில் நிபுணன்.இப்படிப் பட்ட  ஒரு அ -ஒழுக்க நபருக்கு எப்படி இந்த ஆற்றல்கள் அல்லது சித்திகள் எல்லாம் வாயத்தது?நாம் பல காலமாக  துறவு பற்றியும் ஆன்மிகம் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் வைத்திருக்கும் கருதுகோள்கள் ஏன் ரச்புடினுக்கு பொருந்தவில்லை?நித்தி தான் செய்து கொண்டிருந்ததாக சொன்ன 'ஆராய்ச்சி' என்ன என்பதைப் பற்றி எல்லாம் அடுத்த பகுதியில் பேசலாம்.

Friday, May 28, 2010

மர்ம யோகி அகத்தியர் 5

சித்தர்கள் பற்றிய வரலாறு  ஒரு இடியாப்பச் சிக்கலாக இருப்பதன் காரணம் ,நமது ஆட்களின்  எதையும் ஆவணப் படுத்தி வைக்காத தன்மையே.இது தமிழரின் குணம் மட்டுமல்ல,இந்தியரின் தேசிய குணம் இன்று ஏற்படுகிற நிறைய அரசியல் குழப்பங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் இந்த அலட்சியப் போக்கே காரணம்.இரண்டு மாவட்டங்களை ஆண்டவர்கள் கூட தங்களை திரிபுவனச் சக்கரவர்த்தி என்று கல்வெட்டுகளில் பொறித்துக் கொள்வது இந்திய வரலாற்றில்  நிகழ்ந்து இருக்கிறது.ஒரே போரில் இரண்டு மன்னர்களும் வென்றதாக இரண்டு வெவ்வேறு கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன!இந்த குழப்பம் போதாது என்று பின்னால் வந்தவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இந்திய தமிழக வரலாற்றில் கைவைத்திருக்கிறார்கள்.ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. சித்தர் பாடல்கள் பெரும்பாலும் எளிதான தமிழிலேயே உள்ளன.[ஆனால் கடினமான இன்னொரு அர்த்தம் தரும் உள்குத்தும்  இருக்கலாம்]ஆகவே இடைச்செருகல் செய்வது எளிது.செய்திருக்கிறார்கள்.ஆங்கிலேயரோடு வந்த பாதிரிகள் இதில் நிறைய' சேவை ''செய்திருக்கிறார்கள்.ரொம்ப 'திருத்த'  முடியாத நூல்களை பொட்டலம் கட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.அவர்களுக்கு தெரியும்  நமது வரலாற்று உணர்வு பற்றி.தமிழ் தமிழ் என்று கத்துவோமே தவிர இந்த நூல்களை எல்லாம் தேட மாட்டோம் என்று.நாம் இதுவரை தேடவில்லை.இன்னமும் அவை ஐரோப்பா ம்யுசியங்களில் தூங்குகின்றன .

சங்க இலக்கியத்தில் சித்தர் என்ற வார்த்தையே இல்லை.நிகண்டுகளிலும் காணப்படவில்லை.வேதங்களிலும் ரிஷிகள்தான் வருகிறார்கள் தவிர சித்தர்களைக் காணோம் .ஸ்வேதா ஆரண்ய உபநிஷத்தில் சித்தன் என்ற வார்த்தை உள்ளதாக துப்பறிந்து இருக்கிறார்கள்.அறிவன் என்ற தமிழ் சொல் சித்தர்களைக் குறிக்கலாம் என்று கருதப் படுகிறது.அப்படியானால் திருமூலர் வருடத்துக்கு ஒன்றாய் திருமந்திரம் மூவாயிரம் எழுதினார் என்பதை எல்லாம் எப்படி புரிந்து கொள்வது?
சித்தர்களில் பலபேர் தமிழர்கள் கிடையாது.ஆனால் தமிழில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள்.அகத்தியர்,போகர் தவிர புலிப்பாணி மங்கோலியர்  .கோரக்கர் வட இந்தியர் .[அகத்தியரைப் போலவே இவருக்கும் வட இந்தியாவில் கோயில்கள் உண்டு.கோரக்பூர் என்று ஊரே உண்டு.கஞ்சா இவர் கண்டுபிடித்ததுதான்!சித்தர்கள் பாஷையில் கோரக்க மூலி என்றே அதைச் சொல்லுவார்கள்.]திருமூலரும் வட இந்தியரே .காச்மீரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்.வந்த காரணமே அகத்தியரைத் தேடித்தான்.வந்த இடத்தில் என்ன என்னவோ ஆகி கூடுவிட்டு கூடு பாய்ந்து திரு மந்திரம் படைத்தார்.கூடு மாறிய இடம் திருவாவடுதுறை. சமீபத்தில் திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரத்தின் பத்தாம் தந்திரத்தை வெளியிட்டிருக்கிற விஷயம் தமிழ் ஊடகங்களில் எங்கும் வராதது நம் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு சான்று.[மச்சான்ஸ்,மானாட மயிலாட மறந்துராதீங்க]திருமந்திரத்துக்கு இதுவரை ஒன்பது தந்திரங்கள்தான் அறியப் பட்டிருக்கிறது.திருமந்திரத்தில் காச்மீரச் சைவச்சித்தாந்தக் கூறுகளை அதிகம் காணலாம் .ஆறு ஆதாரங்கள்,தாந்திரீக யோகம்ஆகியவை காச்மீர சைவக் கூறுகளே.காச்மீருக்கும் சீனாவும் திபெத்தும் நிறைய சித்தாந்தக்  கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன.
நம்மைப் போல் அல்லாது எதையும் சரியாக ஆவணப் படுத்தி வைக்கும் வழக்கம் சீனர்களிடம் இருந்தது.3000BC யில் இருந்தே பாப்பிரஸ் தாள்களில் வரிசையாக தங்கள் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.
ரொம்ப நாள் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு நிறைய இருந்தது,மறுபிறவி,மரணத்தின் பின் வாழ்க்கை பற்றியெல்லாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.அதற்காக  பயிற்சிகளையும் மருந்துகளையும் தேடிக் கொண்டே இருந்தார்கள்.மூத்திரத்தைக் குடித்தார்கள்.பாதரசத்தை [கடும் விஷம்]பாடம் பண்ணி சாப்பிட்டு சாகிறோமா இல்லையா என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்தார்கள் நம்முடைய சித்தர்களிடமும் இந்த நோக்கைக் காணலாம்.மற்றவர்கள் எல்லாம்  மீண்டும் பிறவா வரம் கேட்டுக் கொண்டிருக்க சித்தர்கள் மரணம் இல்லா பெருவாழ்வுக்காக பரிசோதனை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.சீனர்கள் வைத்தியத்திலும் பெரு ஆர்வம் காட்டினார்கள்.அக்கு பங்க்சர் வர்மம் இரண்டுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.ரசவாதத்திலும் வல்லவர்கள்'
ரசம் என்றால் பாதரசம் சாதரண நிலையில் கடும் விசமாக உள்ள இந்த பொருள் சரியான முறையில் பாடம்  செய்யப்பட்டால் நிறைய நோய்களை தீர்க்கும்.ஏன் மரணமில்லா பெருவாழ்வையே அளிக்கக் கூடும் என்று நம்பினார்கள் சித்த மருத்துவத்தில் இன்று எய்ட்சுக்கு தரும் மருந்து பாதரசம் சார்ந்ததே.சித்தமருத்துவத்தில் பாதரசம் தவிர்க்க முடியாத பொருள்.ஆனால் பாதரசம் இந்தியாவில் எங்கும் கிடைக்காது!பிறகு எங்கிருந்து பாதரசம் வந்தது?சீனத்த்தில் இருந்தது தான்.காவலுக்கு இருந்த 'அரக்கர்கள்'கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சீனாவில் உள்ள பாதரசக் கிணற்றில் இருந்து ரசத்தைக்  கடத்திய கதையை போகர்  தன் நூலில் பதிவு செய்திருக்கிறார்..

Tuesday, May 25, 2010

மர்ம யோகி அகத்தியர் 4

ராவண புராணத்தை முடித்துவிடலாம்.ராவணன் பல விசயங்களில் விற்பன்னன் ஆனால் பெண்கள் விசயத்தில் ரொம்ப வீக் என்று புராணங்கள் சொல்கின்றன.அவன் பல வரங்கள் பெற்றிருந்தாலும்  குறைந்தது 18  சாபங்களாவது அவனது பத்து  தலை மேல் இருந்தது பெரும்பாலும் பெண் சமாச்சாரங்களால் கொடுக்கப் பாட்ட சாபங்கள் ஒரு முனிவரின் கண் முன்னாலேயே அவர் மனைவிக்கு 'மவுத் கிஸ்' கொடுத்துப் பெற்றுக் கொண்டது ஒரு சாம்பிள். சூர்ப்பனகைக்காக பழி வாங்கத்தான் சீதையை தூக்கிப் போனான் என்பது அத்தனை நம்ப முடியவில்லை [ஒரு கொசுறு செய்தி சூர்ப்பனகையின் இன்னொரு பெயர் மீனாட்சி!]அவன் பெற்றுக் கொண்ட சாபங்களில் ஒன்று விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் தலை சிதறிப் போகும் என்பது அதனாலேயே அவன் சீதையிடம் பொறுமை காத்தான் என்பார்கள் [இன்னொன்று அவன் கண் முன்னாலேயே வானரங்களால் அவன் மனைவி துயில் உறியப் படுவாள் என்பது] அவனிடமிருந்து சீதையை மீட்டு ராமன் அயோத்திக்கு மீண்டபோது கூடவே ஒரு பெரும் ஊர்வலம் சென்றது அதில் அகத்தியரும் இருந்தார்
                                                                           அகத்தியரின் தோற்றம் பற்றிய கதை கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி கதை அவர் நேரிடையாக ஒரு பெண் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை ஒரு குடத்திலிருந்து பிறந்தார் .ஆகவேதான் அவர் பெயர் கும்பமுனி என்பார்கள்.ஆனால் அவர் மட்டுமே கும்பத்தில் இருந்து பிறக்கவில்லை வசிட்டரும் அவ்விதமே பிறந்தார் .அவரையும் நாம் கும்பமுனி என்றே அழைக்கலாம் அந்த வகையில்  உலக வரலாற்றிலேயே முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை என்று அவரைக் கூறலாம். இதேபோல் ஐரோப்பாவில்  பரசெல்சஸ்[Paracelsus] என்ற ரசவாதி [இவரும் ஒரு  மர்ம யோகியே]17 ம் நூற்றாண்டில் ஒரு சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்கியதாகச் சொல்லப் படுகிறது. இது போல் வினோதமான கர்ப்பங்கள் பற்றிய குறிப்புகள் புராணங்களில் நிறைய காணப் படுகின்றன.கன்னிப் பிறப்பு ஹிந்து மதத்துக்கு புதிதான விசயமே அல்ல. அது தவிர ஒரேநாளில் கருவுற்று குழந்தை பிறந்ததும் சொல்லலப் படுகிறது ரிஷி கர்ப்பம் ராத் தங்காது என்பார்கள் .ஆனால் அதற்கு நேர் எதிராக லோபாமுத்திரை [அகத்தியர் பத்தினி ]அவர்  மகனை ஏழு வருடங்கள்  கருத்தாங்கி பெற்றார்!
                                                                                                       அகத்தியரின் இன்னொரு பெயர் குறுமுனி என்பது.அவரது உயரக் குறைவு குறித்த பட்டம் இது.இதன் காரணமாவே அகத்தியரை சீனர் என்று சந்தேகப் படுவோர் உண்டு தென் கிழக்கு ஆசிய  நாடுகள் சிலவற்றில் அகத்தியரை சீனராக கருதும் கதைகள் உலவுகின்றன
                                                                                               இது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி இல்லை. சித்தர்களில் பலர் தமிழர் இல்லை போகர் சீனர் என்பது தெரியும் போன்க் யாங் என்று சீனாவில் அவர் பெயரில் நூல்கள் உள்ளன புலிப்பாணி மங்கோலியர் புலஸ்தியர் சிங்களர் [ராவணனது தாத்தா பெயரும் புலஸ்தியர் என்பது குறிப்பிடத் தக்கது ]இத்தனை பெரும் ஏன் அவ்வளவு தொலைவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வரவேண்டும்?காரணம் இல்லாமல் இல்லை அதற்குமுன் சித்தர்களுக்கும் சீனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பார்த்துவிடுவோம்
                                 

Monday, May 24, 2010

தீரா இலக்கியம் 1 -சாமர்செட் மாம்

இந்த இடத்தில் என்னுடைய சுய ரசனை சார்ந்த வாசிப்பு அனுபவங்களை எழுதலாம் என நினைக்கிறேன் இங்கு நான் டால்ஸ்டாய் பற்றியோ தாஸ்தாவ்ஸ்கி பற்றியோ ஒரு நூறு வருடத் தனிமை பற்றியோ எழுதமாட்டேன் என்று சூடன் அணைத்து சத்தியம் செய்கிறேன்  நமது  புருவம்தூக்கி இலக்கியவாதிகள் அவர்களைப் பற்றி போதுமான அளவு புலம்பித் தீர்த்து விட்டார்கள் அதேசமயம் மில்ஸ்  அண்ட் பூன் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் பற்றியும் எழுதப் போவதில்லை நான் எழுதப் போவது சாமர்செட் மாம் தன்னையே வர்ணித்துக் கொண்டதுபோல் 'இரண்டாவது வகுப்பில்  முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் 'எழுத்தாளர்கள் பற்றி [என்னையும் நான் அப்படியே வர்ணித்துக் கொள்ளவே விரும்புவேன்]                                                                                                                                  
சாமர்செட் மாம் பற்றி நமது தமிழ் வெளியில் யாரும் அதிகம் எழுதியது இல்லை போல் தெரிகிறது சுஜாதா மெலிதாக ஏதோ சொல்லியிருந்தார் ஜெயமோகன் அவரது புகழ் பெற்ற நாவல் the razor 's edge பற்றி குறிப்பிட்டு இருந்தார்  அதிலும் அதை எழுதியவராக தாமஸ் மான் என்று தவறாக குறிப்பிட்டு இருந்தார் மாமை நாம் அதிகம் பொருட்படுத்தாதற்கு பல 'இலக்கிய' காரணங்கள் இருக்கக் கூடும் மாம் 'புரட்சி' எழுத்தாளர் அல்ல!எல்லோருக்கும் புரியும் படி வேறு எழுதினார்[என்ன ஒரு முட்டாள்த்தனம்!]கதை சொல்லும் முறையிலும் புரட்சி செய்யவில்லை நேரடியான கதை சொல்லி ஆனால் பெரும்பாலும் ஐரோப்பாவின் மேல்தட்டு மக்களின் அலட்டல்கள் பற்றியும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கடைசி நாட்கள் பற்றியும் எழுதினார் பூர்ஷ்வா எழுத்தாளர் என்று சிலர்  சொல்லலாம் ஆனால் அவர் கிப்ளிங் போல காலனி ஆதிக்கத்தை தூக்கி வைத்து எழுதவில்லை என்று சொல்லியே ஆகவேண்டும்                                                                                                        
மிக நேரிடையான கதை சொல்லல் முறை அவரது ஆனால் அவரது கதை மாந்தர்கள் அத்தனை நேரிடையானவர்கள்  அல்ல பிராய்டின் பாதிப்பு அவர் கதைகளில் உண்டு  மனிதர்களின் மேல் பாசாங்குகளின் அடியில் மறைந்து கிடக்கும் மாற்று முகங்கள் பற்றி அவருக்கு அதீத ஆர்வம் இருந்தது தெரிகிறது                                                                                                                                               மாம் பாரிசில் பிறந்த ஆங்கிலேயர் [1874 ]அம்மாவுக்கு காசநோய் இருந்தது அப்போது அது கொல்லும் வியாதி [இப்போதும்தான் என்பது அதிர்ச்சிகரமான செய்தி எய்ட்சை விட அதிகம்  பேரைக் கொன்று குவிக்கிறது] குழந்தை பெற்றால் நோய் தீரும் என்று ஒரு புத்திசாலி டாக்டர் சொல்லிவிட மாமின் தாயார் வருடத்துக்கு ஒன்றுக்கு என ஆறு குழந்தைகள் பெற்று ஆறாவது பிரசவத்தில் இறந்து போனார் மாம் மூன்றாவது குழந்தை தந்தையும் இரண்டு வருடங்களில் புற்று நோயில் இறந்துபோக அநாதை ஆனந்தன் ஆன மாம் இங்கிலாந்தில் மாமா வீட்டுக்கு அனுப்பப் பட்டார் மாமா வீரப்பன் வகையறா போதாது என்று பள்ளிக் கூடத்தில் ராகிங் வேறு அவரது பிரஞ்சு ஆங்கிலம் மெலிந்த உடல் திக்கு வாய் எல்லாம் பையன்களுக்கு கேக் சாப்பிட்டது போல் இருக்க மாம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார் of  human bondage  என்ற நாவலில் இந்த நாட்களை நரகம் என்று குறிப்பிட்டுள்ளார்                                                                                                                                                                        பள்ளி முடிந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நாள் கிளார்க் வேலை பார்த்தார் மாமா விடவில்லை பாதிரியாராக  [அந்தக் காலத்தில் வேறு ஒன்றுக்கும் உபயோகம் இல்லாவிட்டால் பாதிரி வேலை நல்ல வாய்ப்பு!]போகலாம் என்றால் திக்கு வாய்  கர்த்தரை கூவி அழைக்க வேண்டிய வேலை ஆயிற்றே !கடைசியில் மருத்துவம் படிக்கப் போனார் அப்போது தான் தனது முதல் நாவல் Liza of Lambeth எழுதினார் பெரிய வெற்றி மேல்தட்டு மக்களிடம் இருந்த அடல்ட்ரி பற்றிய நாவல் அது அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான் நிறைய நாவல்கள் நாடகங்கள் பிரயாணக் கட்டுரைகள் ...ஒரு கட்டத்தில் பிரிட்டனின் அதிகம் சம்பாதிக்கும் எழுத்தாளர்
                                                                                                                                  
        மாமின்  தனித்த அம்சமாக நான் கருதுவது அவர் மனிதர்களை கருப்பு வெளுப்பு ஆக பார்க்கவில்லை  என்பதே  ஆஷாட பூதிகளின் அடிமனதிலும்  கொந்தளிக்கும ஆசைகள் வக்கிரங்கள் வாய்ப்பு கிடைத்தால் குற்றம் செய்யும் இச்சை ஆகியவை ஒளிந்திருப்பதை  காண்பித்தார் அதேசமயம் ஒழுக்க ஏணியில் ஏறிக் கொண்டு அவர்களை கண்டிக்கவும் செய்யவில்லை [நித்தியானந்தர் நினைவுக்கு வருகிறாரா ]அதே போல் கெட்டவனாக  எல்லோரும்  கருதும் ஒருவன்  அந்த நேர உணர்ச்சியில் மிகப் பெரிய தியாகம் ஒன்றை செய்து விடலாம் எந்த மனிதனையும் முழுமையாக கணித்து விட முடியாது என்பதே அவரது செய்தி அவரது புகழ் பெற்ற நாவல்கள்     Moon and six pence மற்றும் Razor's edge இரண்டிலும் இந்த தீம் இருப்பதைக் காணலாம் Moon and six pence ஓவியர் பால் காகினின் [Paul Gaugin]கதை ஒரு சராசரி மேல்தட்டு நடுத்தரவாசிக்கான சுகவாசி வாழ்க்கையை குடும்பத்தை குழந்தைகளை  விட்டு விட்டு திடீர் என்று கதாநாயகன்  யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மறைந்து விடுகிறார் போன இடமும் காரணமும் தெரியாமல் எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் கடன் தொல்லையோ காதலோ காரணம் இல்லை  பசிபிக் தீவுகளுக்கு நாயகன் ஓடிப் போன காரணம் ஓவியம் வரைவதற்கு!அதுவரை அவருக்கு  கலை ஆர்வம் இருந்ததாகவே யாரும் அறிந்திருக்கவில்லை  எந்தப் பயிற்சியும் அதில் கிடையாது! ரொம்ப போரான ஆசாமி என தான் அதுவரை அறியப் பட்டார் போன இடமும் சொர்க்க பூமி என்று சொல்ல முடியாது மலேரியாவும் தொழுநோயும் சல்லிசாய்க் கிடைக்கும் தாஹிதி தீவுகள் அங்கு ஒரு குடிசையில் தங்கிக் கொண்டு ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு [ஆமாம் கற்றுக் கொண்டு!]வரைந்து தள்ளுகிறார்  கடைசியில் தொழு நோய் வந்து கைவிரல்கள் எல்லாம் உதிர்ந்து போன நிலையிலும் குடிசையின் சுவர்களில் எல்லாம் வரைந்து கொண்டே இறந்து போனார்  இது உண்மையான ஒரு மனிதனின் வாழ்க்கை என்று சொல்லா விடில் இதை நம்புவது மிகச் சிரமமாக இருக்கக் கூடும்    
                                                                                                      
காகினின் ஓவியங்கள் இன்று கோடிக் கணக்கான டாலருக்கு விலை போகின்றன ஆனால் அவர்  வாழ்நாளில் அவரைச்  சீண்டுவார் இல்லை அவரும் அதற்கு கவலைப் பட்டாற்போல் தெரியவில்லை ஆனால் சரித்திரம் முழுக்க தான் நம்புகிற ஒரு விசயத்துக்காக உணர்வுக்காக [கலை, இசை, கடவுள், சமூக மாற்றம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்]தனது முழு வாழ்வையும் பணயம் வைத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களை எது செலுத்துகிறது?முழுச் செவிடான பிறகும் பீத்தோவான் இசை அமைத்துக் கொண்டே இருந்தார் கண் பார்வை மிகக் குறைந்த நிலையிலும் பூதக் கண்ணாடிகளுடன் க நா சு படித்துக் கொண்டே இருந்தார் Moon and six pence மனிதனுக்குள் இருக்கும் இந்த தர்க்கத்துக்கு உட்படாத விசையைப் பற்றிப் பேசுகிறது மனிதன் முழுக்க தர்க்கத்தால் ஆனவன் அல்ல 
                                                                                                                                      
Razor's edge ன் லேரி இதே போல் ஒரு மனிதனே தனது காதல் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஞானம் தேடி ஐரோப்பா முழுதும் அலைகிறான் கடைசியில் இந்தியா வருகிறான் தேடியது கிடைக்கிறது மீண்டும் பாரிசில் தனது பழைய காதலியை சந்திக்கிறான் ஆனால் ஒரு வழிதவறிய போதைக்கு அடிமையான தனது பால்ய சினேகிதியை திருமணம் செய்யும் நாள் அன்று அவள் ஓடிவிட கையில்  உள்ள காசை எல்லாம் தானம் செய்து விட்டு இந்திய ஞானிகள் போல் கடவுளை மட்டு நம்பி அமெரிக்காவுக்கு புறப்படுகிறான் கஞ்சன்காடு பாப்பா ராமதாஸ் கையில் ஒரு பைசா இல்லாமல் இந்தியா முழுக்க சுற்றித் திரிந்தார் காசு கிடைத்தாலும் தூக்கி எறிந்து விடுவார் ஆனால்  சில சிறிய சோதனைகளைத் தவிர வழி   முழுவதும் அவரது கடவுள் ராம் உணவும் இருப்பிடமும் அளித்தான் இன்று இந்தியாவில் கூட அவ்வாறு திரிய முடியாது சாமியார்களும் அவர்கள் வணங்கும் ராமனும் மிகுந்த சந்தேகத்துக்கு உரியவர்களாக மாறி விட்டனர் அமெரிக்காவில் இது சாத்தியமே இல்லை இந்த இருவருமே வாய்ப்பு இருந்தும் ஒரு கடின வாழ்க்கையை வேண்டும் என்றே தேர்ந்து எடுக்கின்றனர் ஆனால் அதை சந்தோசமாகவே செய்கின்றனர்
                                                                    
    தனிப்பட்ட வாழ்வில் மாம் கூட சர்ச்சைக்கு உரியவராக தான் இருந்தார் மாம் இருபால் உறவினர் ஒபியம் புகைப்பவர் தனது மகள் தனக்கு பிறந்தவள் அல்ல என்று எழுதினார்!கொஞ்ச காலம் பிரிட்டிஷ்  உளவாளியாக இருந்தார் அவரது கதைகள் திரும்பத் திரும்ப படம் ஆக்கப் பட்டுள்ளன பெட்டி டேவிஸ் நடித்த The letter  சிறந்த ஒன்று டிவியில் டைனோசொர்கள் உலவாத மதியங்களில் சிலசமயம் பார்க்க நேர்ந்தால் தவறவிடாதீர்கள்

Friday, May 21, 2010

மர்ம யோகி அகத்தியர் 3

அகத்தியருக்கும் ராவணனுக்கும் உள்ள தொடர்புகளை இன்னும் சற்று பார்க்கலாம் பிரபஞ்சசாரம் என்ற ஓலைச் சுவடி கூற்றுப் படி அகத்தியர் பிறந்து ஏறத்தாழ 9000 வருடங்கள் ஆகிறது ராமன் அகத்தியர் ராவணன் ஆகிய மூவரும் சம காலத்தவர் ஒருவரை ஒருவர் சந்தித்து உள்ளனர் ஆகவே ராமாயணம் நடந்ததும் 9000 ஆண்டுகளுக்கு முன்பு தான் நம்முடைய சரித்திர ஆய்வாளர்கள் இந்த காலக் கணக்கை  ஒத்துக் கொள்வார்களா   தெரியாது                                                                                                                                    ராவணனின்தாத்தா புலஸ்தியர் சப்த ரிஷிகளில் ஒருவர் அகத்தியரும் சப்தரிஷிகளில் ஒருவரே ராவணன் வீணையில் வித்தகன் என்பது பிரசித்தம் அவனது கொடியில் சின்னமாக வீணைதான் இருந்தது வீணை வாசித்துதான் அவன் சிவனை மயக்கி பலவரங்களைப் பெற்றான் அப்படிப் பட்ட ராவணனை அகத்தியர் வீணைப் போட்டியில் தோற்கடித்து இருக்கிறார் ராவணன் ஆண்டது இலங்கையை மட்டுமல்ல சுனாமி வந்து அழிப்பதற்கு முன்பிருந்த குமரிக் கண்டத்தையும் சேர்த்துதான் எனத் தெரிகிறது  இந்தோனேசியா வரை இராமாயண  கதையின் அடையாளங்கள்   கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் தமிழ் நாட்டை ராவணன் ஆண்டதாக குறிப்பு இல்லை மூன்று உலகங்களையும் வென்ற ராவணன் ஏன் [அவன் தமிழ் பேசும் மன்னனாக  பரவலாக கருதப் படும் பட்சத்தில்]தமிழகம் வரவில்லை அகத்தியர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது ராவணன் தமிழ்நாடு பக்கம் வராமல் காந்தர்வத்தால் வசியம் செய்து அகத்தியர் தடுத்துவிட்டார் எனப் படுகிறது.
                                                                     அகத்தியரைப் போலவே ராவணனும் ஒரு mysterious guy  எனலாம் ராவணன் நம் தமிழ் சினிமாக்களில் வருவதுபோல் நாயகியை  தூக்கிச்சென்று  ரேப் செய்யமுயலும் மூளையற்ற மாமிசமலை வில்லன் அல்ல அவனது பத்து தலைகள் அவனது அளவற்ற அறிவைக் காட்டும் குறியீடாக இருக்கக் கூடும் ' வீர்யம்'  மிக்க  ஆண்மகன் எனவும் தெரிகிறது அவனது அந்தப் புறம் நிரம்பி வழிந்தது விரும்பாத பெண்களையும் அவன் விட்டுவைப்பதில்லை தான் ஆனால் சீதையிடம் அவன் தன் வலுவைக் காண்பிக்கவில்லை  போரில் மட்டுமல்ல வீணை போன்ற நுண்கலைகளிலும் தேர்ச்சி இருந்தது [ஹிட்லருக்கு ஓவியத்தில் இருந்த  புலமை ஒப்பு நோக்கத் தக்கது ]தேவர்களைக் கொடுமை செய்தாலும் அவனது நாட்டு மக்களை நன்றாகவே வைத்திருந்தான்                                                                                              ராவணன் இலங்கையை ஆண்ட சமயத்தில் தமிழ் நாட்டில் இருந்த மன்னர்கள் யார் ராமாயணம் வானரங்களாக குறிப்பிடும் சர்ச்சைக்கு உரிய மக்கள் யார் என்பதற்கெல்லாம் விடை ஒரு வேளை பொதிகை மலையிலும் சதுரகிரியிலும் தலை மறைவாய் சுற்றிக் கொண்டிருக்கும் அகத்தியரிடம் இருக்கலாம் ஏனெனில் இந்த சம்பவங்களுக்கு எல்லாம் அவர்தான் ஒரே ஒரு ஐ விட்னெஸ் போல தெரிகிறது!

Thursday, May 20, 2010

மர்ம யோகி அகத்தியர் 2


பத்து வருடங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்துக்கு வந்ததும் முடி கொட்டிய கரடி போல் இருந்த ஒருவரை நண்பர் அறிமுகப் படுத்தினார் பரம்பரை  சித்த வைத்தியர் என்று சொன்னதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து நான் சிந்தாமணி வைத்தியர் என்றார் சிந்தாமணி வைத்தியமுறை குமரி மாவட்டத்தில் மட்டுமே தற்போது இருக்கிறது அது ராவணன் ஏற்படுத்திய வைத்தியம் நான் சந்தேகத்துடன் சீதையை தூக்கிப் போன ராமாயண ராவணனா என்றதற்கு அவர் மிகுந்த கோபமுற்று சீதையை ராவணன் தூக்கிப் போகவில்லை அது ஆரியர்களின் கட்டுக்கதை என்றார் அப்படியானால் சீதை தானாக இலங்கைக்கு  சுற்றுலா போய்விட்டாளா என்று நான் கேட்டதற்கு சற்றும் அசராமல் ஆமாம் என்றார் சீதையின் பிறப்பில் உள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா சீதை ஜனகனின் வளர்ப்பு மகள் மட்டுமே உண்மையில் சீதை ராவணனின் மகள் அப்படியானால் ராமன் தான் சீதையை தூக்கிப் போயிருக்க வேண்டும் என்றார் எனக்கு லேசாக தலை சுற்றுவது போல் இருந்து சமாளிப்பதற்குள் அகத்தியர் ஒரு ஆரிய உளவாளி என்ற அடுத்த குண்டை வீசினார்                                                                                                                                        அவர் கருத்துப் படி தமிழர்களின் வைத்தியமுறைகளை கடத்திவர அனுப்பப் பட்டவர் தான் அகத்தியர் உண்மையான தமிழ் மருத்துவத்தின் தந்தை ராவணனே அவனது பல நூல்கள் அழிக்கப் பட்டன அல்லது  மறைக்கப் பட்டன ஆயுர்வேதம் என்பது திருடப் பட்ட சித்த [சிந்தாமணி]மருத்துவமே ஆகவே எல்லா சித்த மருத்துவக் கல்லூரிகளிலும் ராவணன் சிலை நிறுவப் பட வேண்டும் !                                                                                                                           வரலாறு என்பது எப்போதுமே வென்றவர் எழுதுவது ராம ராவண யுத்தத்தில் ராவணன் வென்றிருந்தால் வேறுவிதமான பார்வை உள்ள சரித்திரமே நமக்கு கிடைத்திருக்கும் அகத்தியர் பற்றியும் ராவணன் பற்றியும் வைத்தியர் சொன்னது ஒரு எதிர்வரலாறு பொது வெளியில் நாம் கேட்கும் வரலாறுகளுக்கு மாற்றான இந்த வரலாறுகள் உண்மையோ இல்லையோ ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி ஒரு முழுச் சித்திரத்தை அளிக்கின்றன புத்தகச் சந்தையில் இஸ்லாம் தமிழர் சமயம் என்று கூட புத்தகம் பார்த்தேன் டாவின்சி கோட் போன்றவைகளும் எதிர் வரலாறு தான்                
                            ராவணன் எழுதியதாக சிலநூல்களே இப்போது கிடைக்கின்றன ராவணன் நாடி சாஸ்திரம் ராவண சம்ஹிதா என்ற இரண்டு நூல்கள் விநோதமாக இரண்டுமே தமிழில் கிடைக்கவில்லை !ராவண நாடி சாஸ்திரம்  என்ற பேரில் நர்மதா பதிப்பகம் தமிழில் ஒரு நூல் வெளியிட்டுள்ளது மாற்றாக ''ஆர்ய உளவாளி '' அகத்தியரின் எல்லா நூல்களும் தமிழில்தான் கிடைக்கிறது சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரின் ஒரு சம்ஸ்கிருத நூல் கூட கிடைக்கவில்லை !                                                                                                          முதலில் அகத்தியர் என்று நாம் குறிப்படுவது ஒரு ஆளைத்தானா என்பதே சந்தேகம் ராமாயணத்தில் ராவணனை வெல்ல ஆதித்ய ஹிருதயம் ராமனுக்கு  சொல்லிய அகத்தியரும் கும்ப முனியும் சித்த வைத்தியர் அகத்தியரும் ராவணனிடம் இசைப் போட்டியில் வென்றவரும் நாடி ஜோதிடர் அகத்தியரும் ஒரே ஆள்தான்  என்று அடித்து சொல்பவரும் 37 அகத்தியர்கள் உண்டு [சமீபத்திய கணக்கு ]என்று உதைத்து சொல்பவரும் உண்டு இதேபோல் ராவணனும் பல ராவணன்கள் இருக்கலாம் [ராவணன் எத்தனை ராவணனடி!]                       

    அகத்தியருக்கு பல இடங்களில் கோயில்கள் உண்டு ராவணனுக்கும் மத்திய இந்தியாவில் கோயில் இருப்பதாக கேள்வி திருநெல்வேலி நெல்லைஅப்பர் கோயிலில் ராவணன் சிலை உண்டு முன்பு வழிபாடும் இருந்ததாக சொல்கிறார்கள் எல்லாம் ராமனுக்கே வெளிச்சம்

Wednesday, May 19, 2010

ச்சீ இணையம் ....

நான் இணையத்தில் ப்ளாக் எழுதப் போகிறேன் என்றதும் நலம்விரும்பிகள் எல்லாம் திடுக்கிட்டு கடுமையாக எச்சரித்தார்கள் போலீசில் கேஸ் கொடுப்பார்கள் வீடு தேடிவந்து உங்கள் கவிதையை உங்களுக்கே [உங்கள் குடும்பத்துக்கும்] புதிய அர்த்தங்களுடன் படித்துக் காண்பிப்பார்கள் பணியிடத்தில் வந்து கோஷம் இட்டு கலவரப் படுத்துவார்கள் உங்களை மனநோயாளி என்று மேடைகளில் பரிதாபத்துடன் உறுதிப்படுத்தி சரியான டாக்டரிடம் காண்பித்து முறையாக மாத்திரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் '' ங்கொய்யால உன்னோட .....''என்று சங்கத் தமிழில் பின்னூட்டம் இடுவார்கள் என்றெல்லாம் தெளிவு படுத்தினார்கள் பெண்ணியர்கள்,மார்க்சியர்கள் பகுத்தறிவு பகலவன்கள்,சனாதனவாதிகள்,மார்க்கவாதிகள்,நற்செய்தியாளர்கள் ,தூய தமிழ் வாதிகள்  என்று எவரையும் கோபப் படுத்தாமல் எழுதுவது மவுன்ட் ரோட்டில்   சைக்கிள் ஓட்டுவதை விட சிரமமானது என்று பயம் காட்டியதைக் கேட்டதும் எனது 'இலக்கியத் தொடை ' சற்று நடுங்கவே செய்தது  என்ன செய்வது விநாச காலே விபரீத புத்தி ஆனால் அவர்கள் சொல்வது உண்மை என்று இணையத்தில் லேசாக உலவினாலே புரிந்துகொள்ள முடியும் இணையம் ஏன் இப்படி பண்பாடு அற்ற பயவெளியாக மாறிவிட்டது?  இணையம் தரும் கட்டற்ற சுதந்திரத்தை நாம் தவறாக பயன்படுத்துகிறோமா?

சமீபத்தில் தோழி ஒருவரிடம் அவர் மகனின் அறிவு வளர்ச்சிக்காக இணைய தொடர்பு பெறச் சொல்லி அறிவுரை செய்தேன் அவர் பதிலுக்கு என்னுடைய இணைய தொடர்பையும் துண்டித்துவிடும்படி பதில் அறிவுரை செய்தார் என்னுடைய பல்வேறு குணக் கேடுகளுக்கு நான் நடுஇரவு வரை கண் விழித்து இணையம் மேய்வதுதான் காரணம் என்றார் அவர் நான் 'அறிவுத் தேடல்தான்' செய்கிறேன் என்று சொன்னால் நம்ப போவதில்லை   என்று தெரிந்தது [அறிவுத் தேடல் செய்கிற மூஞ்சியப் பாரு ]அவர் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது இணையத்தை உபயோகம் செய்வோர்களில்  பாதிக்கும் மேல் போர்னோ தளங்களைத் தான் தேடுகிறார்கள் [நான் அந்தப் பக்கமெல்லாம் போகவே மாட்டேன் என்று சொல்லவே நான் விரும்புகிறேன் ...ஆனால் இன்று  எனது பிறந்த நாள் இந்த நாளிலும் பொய் சொல்லவேண்டுமா என யோசிக்கிறேன் ] எவ்வளவு பூட்டு போட்டாலும் இவற்றை  இணையத்தில் தவிர்க்கவே முடியாது  மிகச் சாதாரணமாக father and  daughter என்று கூகிள் செய்தால் கூட  விபரீதமான விடைகள்தான் அதிகம் கிடைக்கின்றன வன்முறையும் காமமும் நம் வாழ்வின் ஒரு பகுதியே அவற்றையும் நாம் பேசவே வேண்டும் ஆனால் இணையத்தில் உள்ள சுதந்திரம் காரணமாகவோ புற உலகில் அது இல்லாதது காரணமாகவோதான் இணையத்தில் அவற்றை மட்டு இன்றி வெளிப்படுத்துகிறோமா ?

புற கலாச்சரங்களுக்கு இணையாக இணைய கலாச்சாரம் ஒன்று உருவாகி உள்ளது இதன் தனி மனித சமூக தாக்கங்களைப் பற்றி ஆராய வேண்டும் தனி வாழ்வில் செய்யத்தயங்கும் விசயங்களை ஒரு மனிதன் இணையத்தில் தயக்கம் இன்றி செய்கிறான் மேசைப் புரட்சியாளர்கள் போல இணையத்தில் மட்டும் புரட்சி செய்பவர்கள் நிறைய பேர் தோன்றி உள்ளனர்  இவர்களை நேர் வாழ்வில் காணும்போது மேக் அப் இல்லாத நடிகையைப் பார்ப்பது போல அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது [அவனா நீயி ?]பணியிட உளவியல் போல இணைய உளவியல் என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி நிறைய சப்லடேர்ன் எழுத்தாளர்களின் மண்டையை ஆராய்வது சமூகத்தின் பாதுகாப்புக்கு உகந்தது என்று தோன்றுகிறது

Tuesday, May 18, 2010

மர்ம யோகி 1

ஏறக் குறைய 9000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பிராமணர்க்கு மகனாக பிறந்தார் இவர் குஜராத் மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் கல்வி பயின்ற இவர் அங்கிருந்து கிளம்பி குமரி கண்டத்தை ஆண்டு வந்த ராவணனிடம் சென்று தனக்கென ஒரு ராச்சியத்தையே பெற்று ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவினார் அப்போது கடல்கோள் வரவே அங்கிருந்து கிளம்பி தோரணமலை வந்து ஒரு பெரிய ஆய்வுக் கூடத்தை நிறுவினார் பின்னர் கடல் கோள் வராத இடம் என பொதிகை மலையை  தேர்ந்து இன்னமும் அங்கு தன்னை தேடி வருபவர்க்கு போதிக்கிறார் தெரிந்த ஆள்தான் பெயர் அகத்தியர் என்று சொல்வார்கள் இவர் உடன் சுப்ரமணியரும் [அதாங்க நம்ம முருகக்கடவுள் ]சேர்ந்துதான் தமிழ் மொழியை உருவாக்கினார்கள் என்று பிரபஞ்சசாரம் என்ற பழைய ஓலைச் சுவடி சொல்கிறது  உண்மை என்றோ இல்லை என்றோ மறுக்க முடியாது கும்பமுனி குறுமுனி அகத்தியர் பற்றி உலவும் எத்தனையோ கதைகளில் இது ஒன்று தொல்காப்பியத்துக்கு முன்பாக அகத்தியர் இயற்றிய அகத்தியம்  பற்றி குறிப்புகள் மட்டும் கிடைக்கின்றன ஆனால் எந்த ஒரு கோயிலுக்குப் போனாலும் அந்த தல வரலாற்றுடன் அகத்தியர் சம்பந்தமாக ஒரு கதை இருக்கும் அவர் சிறு வேடத்திலாவது வராத புராணமோ இதிகாசமோ இல்லை எல்லா சித்தருக்கும்  தலையாய சித்தர் வைத்திய நூல்கள் மட்டும் அல்ல  ரசவாதம் மாந்திரீகம் ஜோதிடம் என்று எழுதிக் குவித்தவர் [உங்களால் நம்ப முடிந்தால் ] இன்னமும் நாடிஜோதிடம் மூலமாக நம்முடன் உரையாடுபவர்  பின்னால்  ஹிந்து மதத்தில் ஆதிசங்கரர் செய்த வேலைகளை பல காலம் முன்பே செய்தவர் தமிழிலும் சனாதன தர்மத்திலும் தவிர்க்கவே முடியாத ஒரு ஆளுமை அகத்தியர் யார் இவர் இவர் பின்புலம் என்ன என்று ஒரு  சிறிய பிரயாணம்....

Thursday, May 13, 2010

இசைபட வாழ்தல் -1

பாடும்போது அசையாத கல்சிலை போன்ற உடல்  மிகப் பெரிய குங்குமப் பொட்டு பாவமே இல்லாத முகம் ஆனால் இந்திய திரை உலகில் இவர் அளவு உணர்ச்சிமிக்க குரல் எவருக்கும் இருந்ததில்லை இவ்வளவுக்கும் சுத்தமான சுருதி இவர் குரலில் உள்ளதாக சொல்லமுடியாது உச்ச்ஸ்தயிகளில் நடுங்கவேறு செய்யும்  சுசிலாவின் குரலைப் போல் ஆற்றொழுக்கான குரலும் கிடையாது அவ்வப்போது பிசிறு அடிக்கும் காற்று வரும் ஆனால் நம் உயிரோடு உயிராக இழைந்து நம் காதோடு காதாக கொஞ்சும் மயக்கும் கிறக்கும் குரல் நிலா காயுது பாட்டை சுசிலா குரலில் கற்பனை செய்து பார்த்து  உள்ளம் நடுங்குகிறது சுசிலா ஒரு கிராமத்துப் பெண்ணுக்காக பாடினாலும் தனது சாஸ்திரிய  சங்கீத நகாசுகளை விட்டுவிடமாட்டார் ஜானகி அப்படி அல்ல காதலும் தாபமும் பொங்கித் ததும்பும் நம் கனவுத் தமிழ்ப் பெண்ணின் குரல் கீழே உள்ள பாடல்களைக் கேட்டுப்  பாருங்கள் குறிப்பாக 'நினைத்தால் இனிக்கும் 'கல்யாண ராமனில் வந்த அதிகம் பிரபலம் ஆகாத பாடல் கூடவே 'எண்ணத்தில் ஏதோ சில் என்றது' என்ற பாடலும் ...ஆம் ஜானகியின் குரலை நினைக்கையிலேயே  ஏதோ சில் என்கிறது ...

Payanam - A Journey S. Janaki (Vol 1) Songs - Payanam - A Journey S. Janaki (Vol 1) Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews

Payanam - A Journey S. Janaki (Vol 1) Songs - Payanam - A Journey S. Janaki (Vol 1) Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews

Wednesday, May 12, 2010

கண்ணீரோ காவியமோ

ஆனால் இலக்கியத்தில் கண்ணீர்க் காவியங்களே வெற்றி பெற்றிருக்கின்றன நகைச்சுவை சுவை மிகுந்த எந்த நூலுக்கும் இதுவரை நோபல் புக்கர் போன்றவை கிடைத்தது போல் தெரியவில்லை நாம் கொண்டாடும் அத்தனை இலக்கியப் படைப்புகளும் கண்ணீர் ததும்பியவே அல்லது ஜெயமோகன் சொல்வதுபோல வாழ்வின் வீழ்ச்சியைப் பற்றி பேசுபவை அந்தவகையில் பார்த்தால் விக்டர் ஹுகோ வின் லெஸ் மிசெரபில்ஸ் ஐ தான் உலகின் மிகப் பெரிய கண்ணீர்க் காவியம் அதை கண்ணீர்விடாமல் உங்களால் படிக்கவே முடியாது \ஏழை படும் பாடு என்று தமிழிலும் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ஞான ஒளி திரைப் படம் அதன் ஒரே  ஒரு கதை இழையை வைத்து எடுத்தார்கள் மதுரையில் படிக்கும் காலத்தில் அறையில் உடன் இருந்த நண்பர் கண்ணீர் வழிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் வில்பர் ஸ்மித் எழுதிய shout at the devil என்ற நாவல் ஸ்மித் பெரிய இலக்கிய எழுத்தாளர் ஒன்றும் அல்ல என்றாலும் அது ஒரு நல்ல நாவல் நான் அவரிடம் உலகின் மகத்தான கண்ணீர்க் காவியமான லெஸ் மிசெரபில் ஐ கொடுத்தேன்... மேலை இலக்கியத்தை விட்டு .உள்ளூருக்கு  வந்தால் இன்று வரை நமது சிறந்த கண்ணீர்க் காவியம் [ஆகவே சிறந்த படைப்பும் கூட ]என ராமாயணத்தை தான் சொல்லவேண்டும் ராமனின் கதை முழுக்க முழுக்க ஒரு tearjerker

அங்காடித் தெருவும் அதீதத்தின் ருசியும்

நான் அங்காடித் தெரு பார்க்கவில்லை ஜெமோ வசனம்  என்ற அம்சம் ஈர்த்தாலும் படம் பெரிய tear jerker [கண்ணீர்க் காவியம்] என்றார்கள் கண்ணீர்க் காவியங்களின் காலம் முடிந்து விட்டதாக நினைத்திருந்தேன் சிவாஜி படங்கள் பலபடங்கள் கண்ணீர்க் காவியங்களே [பாபு என்று ஒரு படம் இருக்கிறது பாருங்கள் இல்லை இல்லை பார்க்காதீர்கள் ]கமலும் நிறைய கண்ணீர்க் காவியங்களை கொடுத்திருக்கிறார் மகாநதி போன்ற அர்த்தம் உள்ள கண்ணீரும் உண்டு உயர்ந்த உள்ளம் போன்ற  அழுவாச்சிப் படங்களும் உண்டு வாழ்வின் இருண்ட பக்கங்களைப் பேசும் கலைப் படைப்புகள் தேவையே ஆனால் அதுவே அதீதம் ஆகி விடக் கூடக் கூடாது எனத் தோன்றுகிறது அதீதத்தின் ருசி அசூயை

Tuesday, May 11, 2010

இடும்பைக் கூர் என் வயிறே

  • கொஞ்ச காலமாக சாப்பாட்டுக்கு லேசாக தாமதம் ஆனால் கூட கை காலெல்லாம் நடுங்கி கண்களில் பூச்சி பறந்து விசை இழந்த பொம்மை போல் ஆகி மருத்துவரிடம் போனதில் அல்சர்  குறைந்த சர்க்கரை வியாதி என்றார்கள் ஆனால் இந்த மனிதர் பிரஹலாத் ஜானி 70 வருடங்களாக சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருக்கிறார் மலமூத்திரம் போவதில்லை ஆனாலும் பார்ட்டி நன்றாகத்தான் இருக்கிறார் மூளை கூட பிசகி இருக்கவில்லை என்று இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு செய்து சொல்கிறது அவரைக் கேட்டால் சிறுவயதில் 'அம்பாள்' கனவில் தோன்றி நாக்கில் எழுதிய பிறகு பசி தாகம் எல்லாம் போயே போச்சு என்கிறார்

Friday, May 7, 2010

ஒரு திடுக்கிடும் செய்தி

நான் என் கவிதைகள் கதைகள் பக்கத்து வீட்டு மாமிகளுக்கான காதல் கடிதங்கள் இவற்றை வெளியிடுவதற்கென்றே www.ezhuththuppizhai.blogspot.com என்ற தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்

குமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது 2

அருமனையில் இன்று சென்னையில் கிடைக்கும் அதே [அ]ருசியுடன் ஸ்பெஷல் தோசை சாப்பிட்டேன் ஏனோ சோகமாக இருந்தது புழுதி பறக்க டூவீலரில் வருகையில் முன்னால் லாரிகளில் மாடு மணல் மரம் இந்த மூன்றும் மாற்றி மாற்றிப் போய்க் கொண்டே இருந்தன ஒரு வகையில் இன்றைய குமரியின் மாற்றத்திற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதுபோல் தோன்றியது குழித்துறை தியேட்டரில் விஜய் ரசிகர்களின் கட் அவுட் நெரிசல் வியர்வை ....ஆம் குமரி தமிழ்நாட்டுடன் இணைந்தே விட்டது

குமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது!

பத்து வருடங்களுக்கு முன்பு மாற்றலாகி குமரி மாவட்டத்துக்கு வந்தபோது உண்மையிலேயே காட்டுக்குள் வந்தாற்போல் இருந்தது காலை எட்டு மணி வரைக்கு வராத சூரியனும் விலகாத குளிரும் நின்ற சீர் நெடுமால் போல் நின்று நீரால் ஆன ஒரு பெருஞ்சுவர் போல் பெய்யும் மழையும் ரோட்டில் சர்வ சாதாரணமாக உலவும் விரித்த கூந்தல் அழகிகளும் ஒரு பெருங்கனவுக்குள் நுழைந்த பிரமையை ஏற்படுத்தின சில இம்சைகளும் இல்லாமல் இல்லை விடிகாலையில் வட்டத் தோசைக்கு மாட்டிறைச்சி தொட்டு சாப்பிடுவதை ஜீரணிக்கவே முடியவே இல்லை இரவு பத்து மணிக்கு பெருச்சாளி போல் வளையை விட்டு வெளிப்போந்து ரோட்டோர கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு செகண்ட் ஷோ பார்த்துவிட்டு  டீக்கடையில் பால் அருந்திப் பழக்கப் பட்ட எனக்கு எட்டரைக்கே ஆள் அரவம் அற்றுப்  போகும் மார்த்தாண்டம் சற்று கலவரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது இரவு ஒன்பது மணிக்கு பனிப்புகை உலவும் மார்த்தாண்டம் சாலைகளில் ஒரு சிகரெட்டுக்கு ஏங்கி நடக்கையில் இரவு ரோந்து போலிசால் சந்தேகத்துடன் விசாரிக்கப் பட்ட காமடியும் நடந்தது நெல்லை நாகர்கோயில் சாலையில் பயணிக்கையில் இரண்டு மாவட்ட எல்லைகளை கண்திறக்காமலே கண்டுபிடித்து விடலாம் ஆரல்வாய்மொழி தாண்டி குமரி மாவட்ட எல்லைக்குள் நுழைந்ததுமே ஒரு குளிர்ந்த காற்று வீசும் தமிழ்நாட்டுடன் அறுபதிலேயே இணைந்துவிட்டாலும் குமரிக்கு என தனி கலாச்சாரம் அரசியல் உணவு ரசனை காலநிலை இருந்து வந்தது நெல்லை எங்கள்  எல்லை குமரி எங்கள் தொல்லை என்று கலைஞர் கடுப்பானதிற்கு காரணம் இல்லாமல் இல்லை ஆனால் இன்று?நாகர்கோயிலில் இரண்டு வாரமாய் தண்ணீர் வரவில்லை என்று ஒரு செய்தி கோடைக் கால விடுமுறைக்கு குமரி வருவதாக சொன்ன நண்பரிடம் நீர் இல்லாத பேச்சிப் பாறையை எப்படி காட்டுவது என யோசிக்கிறேன் திற்பரப்பு அருவியில் ஒரே கூட்டம் டிராபிக் ஜாம் என்கிறார்கள்  உள்ளூர் மக்களும் நிறைய உண்டு முன்பு 'பாண்டி' மக்களைப் போல உள்ளூர் வாசிகள் தண்ணீரைக் கண்டு இப்படி பரவசப் பட மாட்டார்கள் இன்று மார்த்தாண்டம்  சாலைகளில் விடிய விடிய வாகனங்களும் புழுதியும் பறக்கின்றன யாரும் எட்டரைக்கு கடையை மூடிவிடுவது இல்லை

Wednesday, May 5, 2010

திருநெல்வேலியும் வெட்டவெளியும்

சமீபத்தில் திருநெல்வேலி போனேன் வழக்கம்போல் வண்ணாரப் பேட்டை சாலைகளில் சென்றபோது ஏதோ ஒன்று வித்தியாசமாக உறைத்தது சற்று சுள் என்றே உறைத்தது நூற்றாண்டுகளாக அங்கு நின்று அந்த சாலைக்கே அழகையும் குளிர்ச்சியும் தந்துகொண்டிருந்த மருதமரங்களை வெட்டிவிட்டார்கள் !இதே போல் தச்சநல்லூர் பக்கம் பசேல் என்று கிடந்த வயல்களையும் 'காடு திருத்தி' மனைகள் ஆக்கி விட்டார்கள் என கேள்விப் பட்டேன் என்னையும் இரண்டு மனைகள் வாங்கிப் போடச் சொன்னார்கள் நிலத்தடி தண்ணீர் நன்றாக கிடைப்பதாக  சொன்னார்கள் பெட்ரோல் கிடைக்கிறதா என்றதற்கு ஏன் முறைக்கிறார்கள் என புரியவில்லை

சித்தர் என்றொரு இனமுண்டு?

சமீபத்தில் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் சித்தர் பரம்பரை என்று தனியாக எதுவும் இல்லை அது ஒரு வாய்மொழி வரலாறே என்றும் சைவத்தின் ஒரு கூறே அவர்கள் என்றும் எழுதியிருந்தார் அவர்  சொன்னது எனக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தியது அவரை யாரும் வலிமையாக மறுத்து எழுதவில்லை அவரது கூற்றுப் படி சித்தர்களின் காலமும் பிந்தியதே அதிகபட்சம் பதினைந்தாம் நூற்றாண்டு அது திருமூலராக இருந்தாலும் சரிதான் மூவாயிரம் வருடம்  மூலன் உடலில் இருந்து வருடத்துக்கு ஒன்றாய் ஒரு பாட்டு எழுதினேன்  என்பதையெல்லாம் கவிச்சுதந்திரம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும் அவர்களது மொழியும் பிற்கால தமிழில் தான் இருக்கிறது ஆகவே சித்தர்கள் பற்றி புழங்குகிற கதைகள் எல்லாம் மிகைப்படுத்தப் பட்ட நம் உள்மன  விழைவுகளே என்பது அவர் நிலை இந்தக் கருத்துகளில் ஓரளவு உண்மை இருக்கிறது  சதுரகிரியை விட டிவி தொடர்களில்தான் சித்தர்கள் அதிகம் நடமாடுகிறார்கள் என்று தெரிகிறது இந்திரா சௌந்தர் ராஜன் வகை எழுத்தாளர்களை தவிர வேறு சித்தர்களைப் பற்றி சற்று நிதானமாய் ஆராய்ந்து இருக்கிறார்களா என்று ஏமாற்றமே மிஞ்சியது கிடைத்தவை எல்லாம் பெரும்பாலும் மயிர்க் கூச்செறிய வைக்கும் அதிமானுடக் கதைகள் கபில் ச்வெலேபில் என்பவர் நல்ல புத்தகம் எழுதியிருக்கிறார் என்றார்கள் கிடைக்கவில்லை மீ ப சோமு மூன்று பாகங்களாக எழுதி அண்ணாமலைப் பல்கலை வெளியிட்ட இந்த புத்தகம் சற்று  'உணர்ச்சி வசப் படாமல்' சித்தர்களைப் பற்றி ஆராய்கிறது  மீ ப சோமு  சில சரித்திர நாவல்களை கல்கியில் எழுதி இருக்கிறார் படித்த ஞாபகம் சில  மூத்தக் குடிமக்களுக்கு இருக்கலாம் ஆனால் இந்த புத்தகம் ஒரு 'சரித்திர நாவல் ' அல்ல!

Sunday, May 2, 2010

கேரளத்தில் சங்க இலக்கிய முசிறியை தேடி அகழ்வாய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன உலகத் தமிழ் மாநாடு நடக்கின்ற இந்த சமயத்திலாவது நாம் ஆதிச்ச நல்லூருக்கு போதிய கவனம் தராவிட்டால் நாம் பழம்பெருமை பேசுவதில் அர்த்தமே இருக்காது ஏற்கனவே ஆயிரக்கணக்கான சுவடிகள் பாதிரிகளால் கடத்தப் பட்டு ஐரோப்பாவின் ம்யுசியங்களில் தூங்குகின்றன நம் கையில் இருக்கும் நூல்கள் இவற்றின் மிகச்சிறுபகுதியே உண்மையில் நம்மிடம் இருப்பது யானையின் வால் பகுதி மட்டுமே யானை ஜெர்மனியிலும் லண்டனிலும் நிற்கிறது அதை இங்கு கொண்டுவர இந்த சமயத்திலாவது முயற்சி செய்யவேண்டும் முன்னூறு அடி வள்ளுவர் சிலையை விட இந்த செய்கைதான் தமிழை அழியாமல் காக்கும்

Friday, April 30, 2010

வணக்கம் வாழிய செந்தமிழ் நானும் ப்ளாக் எழுத வந்துவிட்டது ஒரு பக்கம் அசட்டு சந்தோசமாகவும் மறுபுறம் புதியதேசத்துக்கு வந்தவன்போல கலவரமாகவும் இனி தமிழ் சமுதாயத்துக்கு என்னென்ன உற்பாதங்கள் எல்லாம் விளையப் போகிறதோ என்று கவலையாகவும் இருக்கிறது என்ன செய்வது ஊழிக் காலத்தில் இந்த மாதிரியான துர்சகுனங்கள் தோன்றத்தான் செய்யும் So here starts the count'.....

LinkWithin

Related Posts with Thumbnails