Thursday, October 21, 2010

மர்ம யோகி அகத்தியர் 11

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து பேருந்தில் நெல்லை திரும்பிக் கொண்டிருந்தேன்.அருகில் ஒரு வெள்ளையர்.காவி வேஷ்டி ,கழுத்தில் உருத்திராட்சம் மற்றும் ஏராள நவமணி மாலைகளுடன் கொஞ்சம் மார்க்கமாகவே இருந்தார்.கையில் ரமணர் பற்றிய புத்தகம் ஒன்று.நானோ ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து கொண்டு ஸ்டீபன் ஹாகிங் புத்தகத்துடன் இருந்தேன்.எனக்கு அந்த சூழலின் முரண் புரிய அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன்.மதுரை வரை விடாது பேசிக் கொண்டே வந்தார் அவர்.பேசியதில் அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நில அளவியலாளர் என்று அறிந்து கொண்டேன்.விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கிறார்.இது ஏழாவது முறை.இந்தியா முன்பை விட இப்போது அதிக சத்தம் போடுகிறது என்று சிரித்தார்.சாலையோர மோட்டல்களில் நட்ட நடு இரவிலும் அலறும் பாடல்களைத்தான் அவ்விதம் குறிப்பிட்டார்.ஆனாலும் அவர் பஸ் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் இறங்கிப் போய்விடுவார்.ஒருவேளை சர்க்கரை நோயாளியோ என்று நினைத்தேன்.இல்லை.அவர் போனது வாழைப்பழங்களுக்காக.ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறைய வாழைப் பழங்களோடு வருவார்.எனக்கும் சேர்த்து  வாங்கிவந்து வற்புறுத்துவார்.எனக்கு அவரது வாழைப் பழக் காதல் ஆச்சர்யமளிக்க உங்கள் ஊரில் அவை கிடைப்பதில்லையா என்று கேட்டேன்.'இத்தனை வகை.இத்தனை ருசி கிடைப்பதில்லை''என்றார்.அங்கு கிடைப்பதெல்லாம் தென் அமெரிக்காவில் இருந்து வரும் பெரிய ஆனால் ருசி அதிகம் அற்ற பழங்கள்.அது இருக்கட்டும்.வாழைப் பழத்துக்கும் அகத்தியருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..வருகிறேன்.

இந்தியாவில் மட்டும் எப்படி இத்தனை வகை வாழைப் பழங்கள் கிடைக்கின்றன?காரணம் இந்தியாதான் வாழைப்பழத்தின் தாயகமாய் இருக்க கூடும்.ஒரு தாவரம் எங்கு முதலில் தோன்றியதோ அங்குதான் அதிக வகைகளைக் காணமுடியும்.நான் பிறந்த இடத்தில்தான் என் சொந்தக் காரர்கள் அதிகம் இருப்பார்கள் இல்லையா.அது போல்தான்.உதாரணமாக இன்று நாம் அதிகமாக பயன் படுத்தும் உருளைக் கிழங்கு உள்ளூர்  அல்ல.தென் அமெரிக்காவைச் சார்ந்தது.அதில் மட்டுமே குறைந்தது ஐந்தாயிரம் வகைகள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.நம்மிடம் அத்தனை வகைகளும் கிடையாது.அத்தனை வகைகளும் இங்கு வளரவும் செய்யாது.[இதற்கு மேல் உருளைக் கிழங்கு பற்றிய விபரங்களுக்கு எழுத்தாளர் ஞானியை அணுகவும்.அவர் உருளைக் கிழங்கு மகாத்மியம் என்ற காவியம் இயற்றி வருவதாய்க் கேள்வி]

வாழைப் பழம் போன்று பல்வேறு தாவரங்கள் குறிப்பாக மூலிகைகளின் தாயகம் பொதிகையே.உலகின் முக்கியமான பல்லுயிர்த் தொகுதி மையங்களில் பொதிகை மிக முக்கியமானது.இமய மலையில் கிடைக்காத மூலிகைகள் அவற்றின் பல்வேறு வகைகள் பொதிகையில் மட்டுமே கிடைக்கின்றன.இதுவே சித்தர்களையும் அகத்தியரையும் பொதிகை நோக்கி வரச் செய்த காரணம்.ஞானம்  வேண்டுமெனில் மலைக்குப் போ என்று ஒரு சொல் உண்டு.அதற்குப் பல காரணங்கள்  உண்டு.ஒன்று மக்கள் கூட்டத்திடமிருந்து விலகுவது.இரண்டாவது சுத்தமான நீர்.காற்று போன்றவை .மூன்றாவது மூலிகைகள்.

ஞானம் அடைவதற்கு மூலிகைகள் அவசியமா என்று கேட்கிறீர்களா..சித்தர்கள் நோக்கில் அவசியம்..மற்ற ஞானியாரைப் போல சித்தர்கள் மரணத்தை இறைவனது மீற முடியாத கட்டளையாகப் பார்க்கவில்லை.ஒவ்வொரு தடவையும்  பிறந்து இறந்து அலைவதையோ அல்லது இறைவனது இறுதித் தீர்ப்பு நாளுக்காய் வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருப்பதையோ அவர்கள் விரும்பவில்லை.முக்தி அல்லது முழு ஞானம் அடையும் வரை மரணம் அண்டாமல் இருக்க வேண்டும் என்றே யோசித்தார்கள்.மரணமில்லாப் பெரு வாழ்வு என்பதை சாத்தியமற்ற ஒன்றாக அவர்கள் கருதவில்லை.அதற்கு பக்தி,யோகம் ,மூச்சுப்பயிற்சி இவை மட்டும் போதாது என்று அவர்கள் உணர்ந்தார்கள்.இயல்பிலேயே நம் உடலில் நிகழும் வளர் சிதை மாற்றத்தின் திசையை அவர்கள் சில மூலிகைகளால் மாற்றி அமைக்க முடியும் என்றுஅவர்கள் கண்டுகொண்டார்கள்.அந்த மூலிகைகளைத் தேடித்தான் அவர்கள் பொதிகைக்கு வந்தார்கள்.

இவ்வாறு மூலிகைகள்  மூலம் உடலை நிலைப் படுத்தி மரணமில்லாமல் இருக்கும் நிலைக்கு காயசித்தி என்று பெயர்.காயசித்திக்குப் பயன்படும் மூலிகைகள் கற்ப மூலிகைகள் என்று பெயர்.கற்பம் எனில் கோடி.கோடி ஆண்டுகள் வாழவைக்கும் மூலிகைகள்!மூலிகைகளையும் ரசத்தையும் வேறு தனிமங்களையும் பயன்படுத்தி இந்த கற்பங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் சித்தர் பாடல்களில் கொட்டிக் கிடக்கின்றன.ஆனால் எல்லாவற்றையும் அப்படியே நம்பி இறங்கிவிடுவது ஆபத்து.முதலில் அவர்கள் தங்கள் பாடல்களில் பெரும்பாலும் பரிபாசை யையே பயன்படுத்தி இருக்கின்றனர்.குரங்குக் கை என்று எழுதி இருப்பதை நம்பி குரங்கின் பின்னால் கத்தியுடன் அலைவதோ சிங்கத்தின் சிறுநீர் என்று சொல்வதை அப்படியே நம்பி சிங்கம் எப்போது உச்சா போகும் என்று அதன் பின்னால் பாத்திரத்துடன் அலைவதோ கூடாது.இவையெல்லாம் மூலிகைகளின் பெயர்கள்.சில சமயங்களில் ஒரே மூலிகையை பல பேர்களில் சொல்லுவதும் உண்டு.அவற்றையெல்லாம் இனம் கண்டறிந்து தேடிக் கண்டு பிடிக்கவேண்டும்.இன்றைக்கு பொதிகை மலை இருக்கிற இருப்பில் மூலிகைகள் கிடைப்பதை விட மலை உச்சிகளில் பல்வேறு விதமான பிராந்திக் கோப்பைகள் கிடைப்பதே எளிதாக இருக்கும்.

ஒருவேளை உங்கள் ஊழ்வினைப் பயனால் இந்த மூலிகைகள் எல்லாம் கிடைத்து கற்பம் செய்துவிட்டதால் போதாது.அதை உண்ணுவதற்கு மிகக் கடுமையான பத்தியங்கள் உண்டு.காலையில் கற்பம் சாப்பிட்டுவிட்டு மலையில் பிட்சா சாப்பிடலாம் என்று நினைக்கக் கூடாது.உப்பு,புளி.காரம் .இவை எல்லாம் சேர்ந்த பெண் எதையுமே தொடக் கூடாது.தொட்டால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!

உண்மையில் அது மறுபிறப்பு போன்றதே.கற்பங்கள் சாப்பிடும் போது பூமிக்குள் ஆழக் குழி தோண்டி கண்காணாது வசிப்பதே நல்லது எனச் சொல்லப் படுகிறது.ஏனெனில் அந்த சமயத்தில் 4444 வகை நோய்கள் தாக்கும் என்று சொல்லப்படுகிறது.அவற்றிடம் இருந்து தப்பிக்கவே இந்த பங்கர் வாசம்.கற்பம் சாப்பிட சாப்பிட உங்கள் தேகம் முழுக்கவே மாறுகிறது.பாம்பு சட்டையை உரிப்பது போல் உங்கள் பற்கள் நகங்கள் கூட உதிர்ந்து மீண்டும் முளைக்கின்றன!இறுதியில் கிடைக்கிறது உங்களுக்கு ஒரு மரணமில்லா ஒளிதேகம்.

சதுரகிரி மலையின் இன்னும் கண்டுபிடிக்காத குகைகளின் ஆழத்தில் இது போல் கற்பம் சாப்பிட்ட  அப்ரெண்டிஸ் சித்தர்கள் நிறைய பேர் அறிதுயிலில் இருப்பதாகவும் அந்த குகைகளை பூதங்களும் கருப்பணசாமியும் காவல் காப்பதாகவும் தகவல்.இது போல் அப்ரெண்டிஸ் சித்தர்கள் பயிலும் பள்ளி ஒன்றை சதுரகிரி மலையில் அகத்தியர் நடத்துவதாகவும் கேள்வி!

Monday, August 16, 2010

மர்மயோகி அகத்தியர் 10

அவலோகிதேஸ்வரர் என்பவர் பௌத்த மதத்தின் முக்கியமான போதிசத்துவர்களில் ஒருவர்.போதிசத்துவர்கள் என்பவர்கள் புத்தரின் பரிநிர்வாண நிலையை அடைந்தவர்கள்.நமது அவதாரங்கள்,கிறித்துவத்தின் தீர்க்கதர்சிகள் ,இஸ்லாமின் நபிகள் போன்று சொல்லலாம்.பௌத்தத்தில் ஒரு முக்கியமான போதிசத்துவர் இவர்.தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகம் வழிபடப் படுகிறார்.இவரைப் பற்றி அதிகம் வரலாற்றுச் செய்திகள் கிடைக்கவில்லை.ஆனால் இவர் தான் நிர்வாணம் அடைந்துவிட்டாலும் உலக உயிர்கள் அத்தனையும் உய்யும்வரை அவர்களை வழிகாட்டுவதற்காக இந்த உலகிலேயே பொட்டிகால என்ற மலையில் இன்றும் இருக்கிறார் எனச் சொல்லப் படுகிறது.கதை வேறெங்கோ திசை திரும்புகிறதே என்று நினைக்கிறீர்களா.இல்லை.இந்த பொட்டிகால மலை வேறு இல்லை.நமது பொதிகை மலைதான்!இவ்வாறு நான் சொல்லவில்லை.shu hikosaka என்ற ஜப்பானிய அறிஞர் சொல்கிறார்.இனி அடுத்த குண்டு.இந்த அவலோகிடேச்வரர்தான் அகத்தியருக்கு பொதிகை மலையில் வைத்து தமிழ் கற்றுக் கொடுத்தார் என்கிறார் இவர்!

தமிழ்நாட்டில் சமணம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன.அந்த அளவு பௌத்தம்  பற்றி தெரியவில்லை. ஆனாலும் ஆங்காங்கே சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.அசோகரின் புத்திரிகள் இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்ப தென்தமிழகம் வழியாகத் தான் சென்றிருக்கவேண்டும்.ஆனால் இந்த அவலோகிடேச்வரர் என்று சிவனைத் தான் குறிப்பிடுகிறார்கள் என சந்தேகம் உண்டு.கடைசியில் உள்ள ஈஸ்வர் என்ற விகுதியைக் காண்க.மேலும் அவலோகிடேச்வரின் இன்னொரு பெயர் சண்டி!சண்டிகேஸ்வரரை நினைவில் கொள்க.இது போல் கடவுள்களைப் பரிமாற்றம் செய்து கொல்வது ஒன்றும் புதிதல்ல.ஹிந்து மதத்தில் உள்ள சரஸ்வதி,தாரா,விநாயகர் போன்ற தெய்வங்கள் சமணத்திலும் பௌத்தத்திலும் உண்டு.சிவன் மாரனை[மன்மதன்]எரித்த கதை பௌத்தத்தில் புத்தர் மாரனை வென்ற கதையாகச் சொல்லப் படுகிறது.ஆனால்  இங்கு மாரன் கிறித்துவம் கூறும் சாத்தானைப் போன்றவன்!நிர்வாண நிலை அடையாமல் உயிர்களை தனது மாயையால் தடுப்பவன்.நாம் கூறவந்தது இதுவல்ல.பௌத்தமும் அகத்தியர் என்ற தொன்மத்தை குறிப்பிடத் தக்கதாக கருதி இருக்கிறது என்பதைச் சுட்டவே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் பொதிகைமலைக்கும் உள்ள பிணைப்பு  பற்றி நிறைய தொன்மங்கள் உலவுகின்றன.ஆதியில் சிவன் வியாசரை சமக்ரிதத்தையும் அகத்தியரை தமிழ் மொழியையும் உருவாக்குமாறு பணித்து அனுப்பி வைத்தார் என்று புராணங்கள் கூறும்.தெற்கே வந்த அகஸ்தியருக்கு தமிழ்க் கடவுளான முருகனே தமிழைக் கற்பித்தான் என்பது இன்னொரு தொன்மம்.ஆகவே தெய்வத்தால் கற்பிக்கப் பட்டது என்ற தர்க்கப் படி தமிழும் தேவ பாஷையே.

அகத்தியருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு சர்ச்சைக்குரியது.ஒரு ஆரியர் தமிழைத் தோற்றுவித்தார் என்பதை நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம்.ஆனால் இந்த தொன்மத்தை திரும்ப திரும்ப நாம் சந்திக்க நேரலாம்.தமிழில் கிடைத்த  ஆதி நூலை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் சீடர் எனப் படுகிறது.ஆனால் தொல்காப்பியத்தில் ஒரு வரி கூட அகத்தியரைப் பற்றிக் கிடையாது!ஆனால் அதற்கும் ஒரு தொன்மம் காரணமாகச் சொல்லப்படுகிறது.தொல்காப்பியர் உட்பட்ட தனது சீடர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் தனது குருவான அகத்தியரையும் அவர் எழுதிய அகத்தியத்தைப் பற்றியும் குறிப்பிடவில்லை என்று அந்த கதை சொல்கிறது.அகத்தியர் இது போல் சீடர்களுடன் முரணுவதில் பேர் பெற்றவரே.ஆனால் இதை வேறு கோணத்தில் அணுகலாம்.வியாசருக்கு முன்னால் வடமொழியோ அகத்தியருக்கு முன்னால் தமிழோ இல்லை  என்று இதற்கு பொருள் கொள்ளத் தேவை இல்லை. இன்றைய வடமொழியின் இலக்கணம் முழுதும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாணினியால் எழுதப் பட்டுவிட்டது.இது போன்ற ஒரு இலக்கணத்தை அகத்தியர் செய்திருக்கலாம்.தமிழ் மொழி காலம் தோறும் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.பெரியார் சமீபத்தில் செய்தது ஒரு சிறிய உதாரணம்.எழுத்து முறைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது உண்மையே.ஆனால் புணர்ச்சிவிதிகள் விகுதிகள் திணைகள் போன்ற அடிப்படை விதிகளில்  பெரிய மாற்றங்களைச் சந்தித்திருக்கிறதா என்பது கேள்வி.அது தேவையும் இல்லை.இவ்வாறு அடிப்படை விதிகளில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டிருந்தால் மொழி அழிந்துவிடும் அபாயம் உண்டு.ஆகவே இது போன்ற இலக்கணங்களை வகுத்துக் கொடுத்தவர்களையே அம் மொழியை உருவாக்கியவர் எனச் சொல்லும் உயர்வு நவிற்சி கதைகள் உருவாகி இருக்கலாம்.அகத்தியர் -தொல்காப்பியர் -தமிழ் மொழியின் தோற்றம் என்ற  தொன்மத்தின் காரணம் இதுவாகவே இருக்கலாம்.

ஆனால்  அகத்தியர் பொதிகைக்கு வந்ததன் காரணம் மொழி மட்டுமல்ல.

Tuesday, August 3, 2010

மர்மயோகி அகத்தியர் 9

பரசுராமரைப் போலவே அகத்தியரும் நல்லதொரு போர்வீரர் என்று ராமாயணம் கூறுகிறது!துரோணரின் ஆசிரியர் அகத்தியர் என்றே சொல்லப்படுகிறது.தன்னைச் சந்திக்க வந்த ராமனிடம் தனக்கு விஷ்ணு வழங்கிய ஒரு வில்லை அகத்தியர் பரிசாக வழங்கினார்.
அகத்தியரைப் பற்றி பிரபலமாக வழங்கப் படும் கதை அவர் ஏன் தெற்கே வந்தார் என்ற கதை.இமய மலையில் சிவன் பார்வதி திருமணம் நடை பெற்ற போது வந்திருந்த விருந்தினர்க் கூட்டத்தின் சுமை தாங்காமல் வட கோடு தாழ்ந்து தென் கோடு உயர்ந்தது.அதைச் சமப் படுத்தவே அகஸ்தியரை சிவன் தெற்கே அனுப்பி வைக்கிறார்.இந்தக் கதையின் பின்னால் ஒரு புவியியல் வரலாறும் ஒளிந்திருக்கிறது .

நமது புவி காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது.சமீபத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையைப் போல பல்வேறு ஊழிகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது.முன்பிருந்த நிலப் பரப்புகள் இன்று கடலுக்கடியில் உள்ளன.கடலுக்க்கடியில் இருந்தவை நிலப் பரப்புகளாக உள்ளன.இந்த மாற்றங்கள் பற்றி விவிலியத்திலும் பல்வேறு நாட்டு புராணங்களிலும் நிறையப் பேசுகிறார்கள்.சில நாகரிகங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன .இவற்றைப் பற்றி பல வாய்மொழிக் கதைகள் உலவுகின்றன.அவற்றில் இரண்டு பெருங்கதைகள் உண்டு.ஒன்று நமது குமரிக் கண்டம்.மற்றதின் பெயர் அட்லாண்டிஸ்.[இது பற்றி ஒரு அமெரிக்க ரிஷியில் எழுதுகிறேன்.மிக சுவராஸ்யமான கதை அது]

குமரிக் கண்டம் ஒரு கட்டுக் கதையே என்பவர் உண்டு.தமிழருக்கு இயல்பிலேயே உள்ள தற்பெருமை உணர்வை மேடம் பிளாவட்ச்கியின் பிரம்மா ஞான சபையின் சில கருதுகோள்கள் விசிறிவிட்டதில் விளைந்த கற்பனை என்பார்கள்.இருக்கலாம்.இங்கு நாம் செய்வது ஆராய்ச்சி அல்ல.அகத்தியருடன் இணைந்து பேசப்படும் சில தொன்மங்களைப் பேசுகிறோம் அவ்வளவே.ஆனால் எந்த தொன்மமும் முழுமையாக கற்பனையில் இருந்து வந்துவிட முடியாது.

குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம் அதில்.வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.

முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்தார்.இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்கிறார்கள்.என்ன ஆராய்ச்சி?ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாக இருக்கலாம்.

ஏன் என்று சொல்கிறேன்.நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான் [faultlines]பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.நமது தென்தமிழகத்தில் காணப் படும் ஒரு பிளவுக் கோடு தோரணமலை அடியாகவே செல்கிறது.அது தோரண மலைப் பிளவு என்றே அழைக்கப் படுகிறது.!ஆனாலும் இந்த பகுதியில் இதுவரை பூமி அதிர்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பட்ட்ட்டதே இல்லை.
சரி.அகத்தியர் தெற்கே வந்த கதைக்கு வருவோம்.இமய மலை ஒரு காலத்தில் கடலுக்குள்  இருந்தது .அறிவீர்களா.அதன் சிகரங்களில் திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன!தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத் தொடர்கள் ,சஹாரா பாலைவனங்கள் இவை எல்லாம் கடலுக்குள் இருந்தவையே.இதே போல் பல நிலப் பரப்புகள் கடலுக்கு உள்ளே வெளியே வந்து போய் இருந்திருக்கின்றன. மிகச் சில பகுதிகள் மட்டுமே எப்போதும் புவியின் மேற்பரப்பிலேயே இருந்திருக்கின்றன.இவையே பூமியின் பழமையான நிலப் பரப்புகள்.இந்தியாவைப் பொறுத்தவரை விந்தியமலைக்குத் தெற்கே உள்ள தக்காண பீடபூமி பகுதிதான் அது.கோடு என்றால் மலை என்று பொருள்.இப்போது வடகோடு[இமயம்] தென்கோடு [விந்திய மலை]'உயர்ந்து இருக்கும் கதையின் பின்னால் உள்ள தத்துவம் புரிகிறதா..இந்த தக்காண பீடபூமியிலும் பொதிகைக்கு சிறப்பாக அகத்தியரும் பிற சித்தர்களும் ஏன் ஈர்க்கப் பட்டார்கள் என்று அடுத்து பார்க்கலாம்.

Monday, July 5, 2010

மர்ம யோகி அகத்தியர் 8

அகத்தியர்தான் ஆரிய கலாச்சாரத்தை முதல் முதலாய் திராவிடத்துக்கு கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கக் கூடும்.நாம் தந்தை வழிச்  சமூகமாக இருப்பதற்கு முன்பு நெடுங்காலம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தோம்.அன்று நமது தெய்வங்களும் தாய்த் தெய்வங்களாகவே இருந்தன.கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தானோ என்னவோ மனிதன் தன்  சாயலில் தான் கடவுளைப் படைத்தான்.ஒரு சமூகம்  வணங்கும் கடவுள்கள் அவர்களது கலாச்சாரத்தின் குறியீடாகவே இருக்கும்.

சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் முன் நாம் இந்திரனையும் அக்னியையும்தான் வணங்கினோம்.இவர்கள் வேத கால கடவுள்கள்.ஆனால் அதற்கு முன்னால் நாம் சக்தி வழிபாட்டையே செய்து வந்தோம்.நமது சங்க நூல்களில் பழையோள் என்றே கொற்றவை[காளி]குறிப்பிடப் படுகிறாள்.

இங்கு மட்டுமல்ல,உலகெங்கும் தாய்த் தெய்வங்களே வழிபடப் பட்டன.இசிஸ்,அஸ்தார்த் போன்ற பெண்தெய்வங்களே எகிப்திலும் இஸ்ரேலிலும் மோசஸ் வருவதற்கு முன்பு வழிபடப்பட்டன.

ஆனால் தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக மாறியபின்பு இந்த தெய்வங்கள் புறக்கணிக்கப் பட்டன.மேலும் இந்த பெண் தெய்வங்களை சாதாரண பொருட்களைக் கொடுத்து 'திருப்திப்' படுத்த முடியவில்லை.அவர்களுக்குச் செய்யும் சடங்குகளில் நிறைய காமமும் வன்முறையும் இருந்தன.மனிதர்கள் ஒரு சமூகமாக உருவாவதற்கு இந்த இரண்டையும் ஒழுங்கு படுத்த வேண்டிய அவசியம் இருந்தது.

செமிடிக் மதங்கள் உண்மையில் தாய்த் தெய்வங்களை சாத்தான் வழிபாடு என்று பயமுறுத்தி முழுக்கவே ஒழித்துக் கட்டிவிட்டன.அவர்களின்  தேவ லோகத்தில் ஒரு பெண் கடவுள் கூட கிடையாது.ஏன் ஒரு பெண் தீர்க்கதரிசி கூட கிடையாது.

ஆனால் இந்தியாவில் சக்தி வழிபாட்டை அத்தனை எளிதில்  ஒழிக்க முடியவில்லை.வேதங்களில் இந்திரனும் அக்னியும் தவிர ருத்திரனும் குறிப்பிடப் படுகிறான் எனினும் ஒரு பயத்தோடுதான் அவனைப் பற்றி பேசுகிறார்கள்.தேவர்களைப் போல் அவன் முழுக்க 'நாகரிக'மானவன் அல்ல.எப்போதும் சுடுகாட்டில் பூத கணங்களோடு திரிந்து கொண்டிருந்த அவனையும் சதா உயிர்ப் பலி வேண்டி நிற்கும் சக்தியையும் வேத முறைப் படி கல்யாணம் பண்ணி வைத்து 'சாந்தி' பண்ணினார்கள்.இந்த கல்யாணத்துக்கு தேவர்கள் அனைவரும் வந்திருந்ததும் இந்த சமயத்தில் தான் அகத்தியர் தெற்கே அனுப்பப் படுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அகத்தியர் தெற்கே வந்ததும் அதே பாணியில் தான்தோன்றியாய் திரிந்து கொண்டிருந்த நிறைய உக்கிர தேவிகளைப் பிடித்து  கல்யாணம் பண்ணிவைத்து சாந்தப் படுத்தி வைத்தார்.தந்தை வழிச் சமூகத்தின் சின்னமான லிங்கங்களை எல்லா இடங்களிலும் ஸ்தாபித்தார்.தாந்திரிக வழிபாடு முறைகளான நரபலி போன்ற விசயங்கள் மென்மைப் படுத்தப் பட்டு தேங்காய் உடைப்பது குங்குமம் தருவது போன்ற குறியீட்டுச் சடங்குகளாக மாற்றப் பட்டன.தாந்திரீக சடங்குகளை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அதே சமயம் வேதத்திலும் முற்றிலும் விலகிவிடாமல் ஆகம முறைகள் உருவாகப் பட்டு  பயன் பாட்டுக்கு கொண்டு வரப் பட்டன.

இதே போல் ஒரு வேலையைத்தான் கேரளத்தில் பரசுராமரும் செய்தார் என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது.தமிழகத்தில் அகத்தியருக்கு இருக்கும் அதே இடம் கேரளத்தில் பரசுராமருக்கு இருக்கிறது.கேரளமே பரசுராம ஷேத்திரம் என்றுதான் அழைக்கப் படுகிறது.காடாக இருந்த கேரளத்தை நாடாக 'மாற்றியவர் 'என்று அவர் கருதப் படுகிறார்.அதேபோல் ராவணனுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள உறவை போல் மகாபலிக்கும் கேரள மக்களுக்கும் உள்ள உறவும் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

Saturday, July 3, 2010

ஒரு அமெரிக்க ரிஷி 1

தொண்ணூறுகளில் வாழ்வின் ஒவ்வொரு முகமும் பயமுறுத்த எந்த நிலத்திலும் காலற்று ஜெயமோகன் தனது கதைகளில் சொல்வதுபோல் சிறிய உடம்பும் பெரிய தலையுமாய் இலக்கற்று பெருங்காற்றில் அலையும் பாலிதீன் குப்பைபோல் திரிந்த நாட்கள் ஒன்றில் அந்த புத்தகம் கிடைத்தது.ஏறக்குறைய கிணற்றில் மூழ்க இருந்தவனுக்கு கடைசிக் கணத்தில் கிடைத்த கயிறு.அல்லது வீசப்பட்ட கயிறு.ஏறக் குறைய இருபது வருடங்கள் ஆகிவிட்டது.புரட்டிப் புரட்டிப் பழுப்பேறிப் போன பக்கங்களில் இருந்து இன்னமும் அவ்வப்போது ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.அது ஒரு வாழ்க்கை வரலாறு.காலத்துக்குப் பொருந்தாத ஒரு ஞானி [A seer out of season] என்ற அந்த நூல் Harmon Hartzell Bro என்பவர் எழுதியது.
புத்தகத்தின் நாயகன் பெயர் எட்கார் கேசி [Edgar Cayce].பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அமெரிக்கர்.அவர் வாழ்ந்த நாட்களில் ஆயிரக் கணக்கான மனிதர்களை நோயிலிருந்தும் மரணத்தில் இருந்தும் காப்பாற்றியவர் .ஆனால் அவர் ஒரு மருத்துவர் அல்ல.


உடலை மட்டும் அல்ல ,மனிதனின் மனத்தையும் ஆன்மாவையும் கூட அவரால் குணப் படுத்த முடிந்தது.ஆனால் அவர் ஒரு துறவியோ பாதிரியோ அல்ல. ஒரு தத்துவ ஞானியோ உளவியல் நிபுணரோ எழுத்தாளனோ கூட அல்ல.


சிலர் அவரை ஒரு மிஸ்டிக் என்றோ அதீத உணர்வாளர் [psychic] என்று சொல்லக் கூடும்.ஆனால் அவர் ஒரு ஆவி உலகத் தொடர்பாளர் அல்ல.[சில சமயங்களில் ஆவிகள் அவருடன் பேசியது உண்டு என்றாலும்]


நான் சிறு வயதிலிருந்தே கிறித்தவப் பள்ளிகளில் பயின்றவன்.என் சூழலிலும் கிறித்தவர்கள் அதிகம்.எனவே பிறப்பால் ஹிந்துவாய் இருந்தாலும் பண்டிகைகளில் பலகாரம் சாப்பிடுவது வரை தான் இந்திய மற்றும் இந்து சிந்தனைகளோடு பரிச்சயம்.ஆனால் விவிலியம் என்னோடு கூடவே இருந்தது.கிறித்து எனக்கு அணுக்கமான நபர். அன்று வாழ்வைப் பற்றிய எனது நோக்கு நிச்சயமாய் கிறித்துவத்தின் நோக்குதான்.நான் கிறித்துவனாக மதம் மாறாவிட்டால் கூட.
ஆனால் வயது ஏற ஏற அந்த நிச்சயம் குறைந்து கொண்டே வந்தது.எனக்குப் போதிக்கப் பட்ட கிறித்துவத்தில் நிறைய ஓட்டைகள் தெரிய ஆரம்பித்தன.இந்த சமயத்தில் தான் இந்து சிந்தனை  நோக்கி திரும்பினேன்.சித்பவனந்தாவின் கீதை விளக்க நூலை ஒரு இருபது தடவையாவது படித்திருப்பேன்.சில புதிர்கள் விடுபடுவது போல் தோன்றியது.இன்னும் படிக்க படிக்க இந்திய தத்துவம் கிறித்துவ சிந்தனையை விட ஆழமாக செல்வதை உணர முடிந்தது.


ஆனால் என்னால் கிறிஸ்து என்ற நபரை முழுக்க ஒதுக்க முடியவே இல்லை.எனக்கு இந்து தத்துவத்தில் இருந்த ஈர்ப்பு அதன்  சடங்குகளில் அத்தனை இல்லை.கிறிஸ்து தந்த இறை உணர்வை கிறித்துவம் தரவில்லை.கொஞ்ச நாள் இரண்டையும் விட்டு விட்டு நிரீச்வரவாதியாக அலைந்தேன்.ஜேகிருஷ்ணமூர்த்தி படித்துவிட்டு பேஸ்த் அடித்தவன் மாதிரி திரிந்தது நினைவு வருகிறது.பெரியார் சிந்தனைகளுடன் பரிச்சயம் இருந்தாலும் ஜேகேதான் அவரைவிட பெரிய நிராகரிப்பாளர் என தெரிந்தார்.


உலகில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் இருந்தாலும் அவை யாவும் இரண்டு மையப் பார்வையையே கொண்டிருக்கின்றன.ஒன்று நமது இந்திய சிந்தனைப் போக்கு.இந்து மதம்,சமணம்,பௌத்தம் எல்லாம் இதில் அடங்கும்.மற்றொன்று செமிடிக் எனப்படும் மத்தியக் கிழக்கில் தோன்றிய சிந்தனைப் போக்கு.யூத மதம்,கிறித்துவம்,இஸ்லாம் போன்ற மதங்கள் இந்தப் பிரிவில் வரும்.கிரேக்கச் சிந்தனை ,பேகன் [pagan] சிந்தனை மற்றும் சீன சிந்தனைப் போக்குகளும் உண்டு எனினும் அவை இந்த இரண்டு பெரிய சிந்தனைப் போக்குகளின் பாதிப்புகள் உள்ளவையே.


மேல்நோக்கில் இந்திய சித்தாந்தமும் செமிடிக் சித்தாந்தமும் முற்றிலும் எதிர் எதிர் நிலைகளில் நிற்பது போல் தோன்றும்.ஆனால் இந்த தோற்றம் மாயையே என்று எனக்கு மெதுமெதுவாக புரிய ஆரம்பித்தது.கிறித்துவும் கீதையும் ஒரே இடத்தில் இருக்க முடியாதா  என இந்த புத்தகம் மூலமே நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.


எட்கார் கேசியை வேத கால ரிஷிகளுடன் ஒப்பிடலாம் ரிஷி என்றால் பார்ப்பவன் என்று அர்த்தம்.[அதைத் தான் நாம் பாப்பான் ஆக்கிவிட்டோம்]நம் கண்ணுக்கு தெரிகிற காட்சிகளின் பின்னால் அசைகிற திரைகளை விலக்கிப் பார்க்கத் தெரிந்தவனே ரிஷி.பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிந்தவன்.ஆகவே தமிழ் இவனை அறிவன் என்று அழைக்கும்.


ஆனால் ரிஷிகளைப் போல் தவமோ யோகமோ செய்யவில்லை.[ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவரே எனினும்]திரைகள் அவருக்கு திறக்கப் பட்டன.பிரபஞ்சத்தின் அத்தனை ரகசியங்களும் அவருக்கு ஒவ்வொன்றாய் காட்டப் பட்டது.தீராத நோய்களைக் குணப் படுத்தினார்.மனிதர்களின் முந்தைய வாழ்க்கைகளைப் பற்றி சொன்னார்.காலம் மறைத்துவிட்ட சரித்திரங்களை  வெளிக் கொண்டுவந்தார்.ஆனால் எல்லாம் அவரது உறக்கத்தில்!
ஆம்.அமெரிக்கா அவரை தூங்கும் தீர்க்கதரிசி என்றுதான் அழைத்தது.


யார் இவர்?

Sunday, June 27, 2010

மர்மயோகி அகத்தியர் 7

உலகம் அணுக்களால் ஆனது என்ற கருதுகோள் ஒன்றும் புதிய கருத்து அல்ல.குறைந்தது  2000 வருடங்களாவது இந்த கருத்து மனிதனை வசீகரித்து வந்திருக்கிறது.இந்த அணுக்களின் அமைப்பை மாற்றுவதன் மூலம் நாம் விரும்பும் வகையில் பிரபஞ்சத்தையும் அமைத்துக் கொள்ளலாம்.என்ற கருத்துதான் சித்தர்களை ரசவாதம் நோக்கி ஈர்த்திருக்க வேண்டும்.முன்பே சொன்னது போல சித்தர்கள் மதவாதிகளைப் போல இந்த பிரபஞ்சம் அதன் அத்தனை விதிகளுடனும் முழுமையாக கடவுளால் படைக்கப் பட்டு வெளியிடப் பட்டது என்பதை நம்பவில்லை.தொடர்ச்சியாக இந்த பிரபஞ்சத்தில் மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்ய இயலும் என்றே நம்பினார்கள்.இன்றைய அறிவியலும் ஏறக்குறைய இதே நோக்கில் தான் செயல்படுகிறது .இல்லையா?[மென் பொருட்களுக்கு புதிது புதிதாய் பதிப்புகள் வருவது போல.]ஆனால் அவர்கள் இறை என்ற விஷயத்தை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எல்லாவற்றுக்கும் ஆதாரமான பொருளை இறைதான் படைக்கிறது.சில சித்தர்கள் அதில் கூட வேறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தனர்.விஸ்வாமித்திரர் திரிசங்கு சொர்க்கம் படைத்தது போல சித்தர்களின் சில செயல்கள் பிரம்மனையும் சிவனையுமே  கலவரம் அடையச் செய்ததாக கதைகள் கேட்கலாம்.சில பிரபஞ்ச ரகசியங்களை வெளியிடக் கூடாது என்று சில சித்தர்களுக்கு சித்தர் குழாமால் அழுத்தம் தரப் பட்ட செய்திகளை அறியமுடிகிறது.இந்த மாதிரி விசயங்கள் தீயவர் கைகளில் சேர்ந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்திருக்கின்றனர்.இந்த காரணம் கொண்டே அவர்கள் நூல்களை சந்தி பாஷையில் எழுதி வைத்தனர்.
இன்றைய அறிவியல் ஏறக் குறைய இதே நோக்கில்தான் நகர்கிறது.அறிவியலும் பிரபஞ்சத்தின் அமைப்பு அணுக்களினால் ஆனது என்கிறது.அதன் அமைப்பை மாற்றுவதன் மூலம் பெரும் சக்தி கிடைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறது.ஆனால் அந்த சக்தி தீவிரவாதிகள் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காய் படாத பாடு படுகிறது.ரசவாதத்தின் மூலம் சித்தர்கள் சாதாரண உலோகங்களை தங்கமாக்கினர்  எனப் படுகிறது.நவீன அறிவியலின் மூலமும் இதை செய்யமுடியும்.என்ன தங்கத்தின் விலையை விட அதிகம் செலவாகும் .சித்தர்கள் இந்த காரியத்தை மூலிகைகள் மூலமும் பாதரசம் போன்ற தனிமங்கள் மூலமும் சாதித்தனர்.அதாவது இயற்கையில் உள்ள பொருட்களையே எடுத்து இயற்கையை வளைத்தனர்.

இதே நோக்கில்தான் அவர்கள் மனித உடலையும் அணுகினர்.அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்பது அவர்கள் நோக்கு.அதாவது பிரபஞ்சமும் மனிதனும் ஒரே விதிகளால் ஆனவர்கள்தான்.புற உலகில் உள்ள எல்லா விசயங்களும் மனித உடலுக்குள்ளும் இருக்கின்றன.அதாவது சிறிய அளவில்.புற உலகில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதம் மனிதனைப் பாதிக்கிறதோ அது போல் மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மூலம்  புற உலகையும் பாதிக்கலாம்.சித்தர்களின் சித்து விளையாட்டுக்களின் அடிப்படைத் தத்துவம் இதுவே.

 இன்னும் விளக்குகிறேன்.தங்கம் போன்ற பல  உலோகங்கள் நமது உடலிலும் உள்ளன .[சிறிய அளவில்]சித்தர்கள் ஆணின்  விந்தையே பாதரசமாக சொல்வார்கள்.பெண்ணின் சுரோணிததை கந்தகமாகக் கொள்வார்கள்.இரண்டும் எதிர் எதிர் நிலைகள்.ஆனால் இரண்டும் இல்லாமல் படைப்பு நிகழாது.ஆனால் பாதரசம் அப்படியே பயன் படாது.அந்த நிலையில் அது கடும் விஷம்.அதை சுத்தம் செய்து மாற்ற வேண்டும்.பாதரசத்துக்கு ஏழு சட்டைகள் உண்டென சித்தர் பாஷையில் சொல்வார்கள்.அதாவது ஏழு மாசுகள்.அவை எல்லாவற்றையும் சுத்திகரித்த பிறகே அது ரசவாதத்துக்கு பயன்படும்.அதே போலதான் விந்தும் .சித்தர்களின் உடற்கூறு படி மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனது.நாம் உண்ணும் உணவு ரத்தம் மாமிசம் என்று ஒவ்வொரு தாதுவாய் மாற்றம் பெற்று வந்து  ஏழாம் மற்றும் கடைசித் தாதுவான விந்தாய் மாறுகிறது!புரிகிறதா?சித்தர்கள் விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று ஏன் சொன்னார்கள் என்று?

இந்த காரணம் கொண்டே சித்தர்கள் மருத்துவத்திலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தினார்கள்.ரசவாதத்தில் பயன்படும் அதே மூலிகைகளையே மருத்துவத்திலும் பயன் படுத்தினார்கள்.விந்தையும் சுரோணிததையும் காம மற்றும் ஜனப் பெருக்க காரியங்கள் தவிர வேறு உத்தேசங்களுக்கும் பயன் படுத்தலாம் என்பது அவர்கள் துணிபு.

Thursday, June 10, 2010

மர்ம யோகி அகத்தியர் 6

இந்த போகர் இன்னும் ஒரு சுவராஸ்யமான சித்தர்.அகத்தியருக்கு அடுத்தபடி தமிழ் நாட்டில் மிக அறியப் பட்ட சித்தர் போகர் தான்  எனலாம்.ஆனால் அகத்தியர் போல புராணங்களில் இதிகாசங்களில் எல்லாம் காணப் படவில்லை.இவரது வரலாற்றிலும் நிறைய முரண்பாடுகள் உண்டு.அவர் சீனர் என்பது ஒரு கூற்று.இல்லை  இந்தியாவில் விஸ்வ கர்மா[கொல்லர் மற்றும் ஆசாரி] குலத்தில் பிறந்து சீனா சென்று திருமூலரைப் போல் போங் யான்க் என்பவர் உடலில் புகுந்து 12000 ஆண்டுகள் [!] உயிர் வாழ்ந்து நிறைய நூல்கள் சீனமொழியில் பல நூல்கள் எழுதி மீண்டும் தமிழ்நாடு வந்து பழனி தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தார் எனவும்  சொல்வர்.[சித்தர்கள் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து போராடிய சமூக சீர்திருத்த வாதிகள் என்ற படிமம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொரு சித்தரின் வரலாற்றிலும் மறக்காமல் அவர்களது ஜாதி குறிப்பிடப் படுகிறது.ஏறக்குறைய எல்லா சாதியிலும் இருந்து சித்தர்கள் தோன்றி உள்ளனர்.]

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்வது போன்ற நம்பச் சிரமப் படுத்தும் விசயங்கள் சித்தர்களிடம் நிறையவே உண்டு.ஆனால் விவிலியத்திலும் இது போல் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் வாழும் மனிதர் பற்றி தகவல் உண்டு.ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப் படுகிறது.அவனது முதல் குழந்தை பிறக்கையில் அவன் வயது 130 !படிப் படியாக மனிதரின் வாழ்நாள் குறைந்தது என விவிலியம் கூறுகிறது.காக புசுண்டர் யுகம் யுகமாக இருப்பதாக போகர் தனது போகர் 7000 நூலில்  கூறுகிறார்.இது போல் பல நம்ப கடினமான  செய்திகள் இந்நூலில் உண்டு.உதாரணத்துக்கு சீனாவில் ஒரு பிரதேச பெண்களுக்கு மாத விலக்கே வருவதில்லை என்கிறார்!இன்னொரு இடத்தில் தான் தயாரித்த ரசமணி கடலைக் குடித்தது என்கிறார்!தான் தயாரித்த ககனக் குளிகை எனப் படும் ரசமணி உதவியுடன்தான் அவர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அவர் ஆகாயப் பயணம் செய்கிறார்!

இந்த ககனக் குளிகை போலவே கமனக் குளிகை என்றும் ஒன்று உண்டு.கமனம் என்றால் உடல் உறவு.அந்த சமயத்தில் இதை இடுப்பில் கட்டிக் கொண்டால் விந்து வெளியேறவே செய்யாது என்று கூறப் படுகிறது.[இதை செய்து தருகிறேன் என்று நிறைய பேர் கோடீஸ்வரன் ஆகிவிட்டார்கள்] உண்மையில் சித்தர்கள் பாஷையில் பாத ரசம் சிவனின் விந்து என்றே அழைக்கப் படுகிறது.சக்தியின் நாதம் [மதன நீர்]கந்தகமாக உருவகிக்கப் படுகிறது.இரண்டும் இணைந்தால் தான் உயிரும் பிரபஞ்சமும் உருவாக முடியும்.ரசமும் கந்தகமும்  எதிர் எதிர் நிலைகள்.பாதரசம் குளிர்ச்சியானது.ஆண் தன்மை கொண்டது.கந்தகம் பெண்தன்மை கொண்டது.சூடானது. பெண்கள் உடலில் கந்தகச் சத்து அதிகம்.அதனால் தான் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விட சூடாக உள்ளது.


ரசவாதம் என்பது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.ஒரு வகையில் நவீன  வேதியியலின் முன்னோடி என சொல்லலாம்.பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் ஆனது என்ற கருத்து தோன்றிய உடன் வெகு சீக்கிரமே இந்த அணுக்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப செயற்கையாக மாற்றும் இச்சையும் மனிதனுக்கு தோன்றிவிட்டது.சித்தர்களுக்கும் மற்ற ரிஷிகள் தீர்க்கதரிசிகள் போன்றோருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இதுதான்.சித்தர்கள் இந்த பிரபஞ்சத்தை இறை படைத்தது என்று  வணங்கி விட்டு சும்மா இருந்து விட வில்லை.நவீன  அறிவியலாளர்கள் போல் அதை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள்.அவர்கள் மரணத்தைக் கூட இயல்பானது என்று ஒப்புக் கொள்ளவில்லை. மத ஞானிகளைப் போல் அவர்கள் உடலை வெறுத்து ஒதுக்க வில்லை.பெரு மதங்கள் உடலை இழிவானது என்றும்  ஞானம் அடைவதற்கு தடை என்றும் சொன்ன வேளையில்  உடலின் மூலமாகவே ஞானம் பெற முடியும் என்ற மாற்று சிந்தனையை வைத்தவர்கள் சித்தர்கள்.'உடம்பை முன்னம் இழுக்கு என்றிருந்தேன் .'என்ற திரு மூலர் பாடல் பிரபலம்.அதில் அவர் 'உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 'என்றே சொல்கிறார்.இதன் காரணமாகவே அவர்கள் மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
ரசவாதத்தை சங்க இலக்கியம் போல் அகம் புறம் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்ற முயற்சிப்பதை புற ரசவாதம் என கூறலாம்.பொருளாசை அதிகம் இல்லாத சித்தர்கள் இந்த விசயத்தில் அதிக ஆர்வம் காட்டியதற்கு காரணம் புதிராக இருக்கிறது.ஆனால் அவர்கள் எழுதிய ரசவாத நூல்களைப் படித்துவிட்டு தங்கம் செய்கிறேன் என்று சொத்தை அழித்தவர்கள் அதிகம் உண்டு.நான் மதுரையில் இருந்தபோது தங்கியிருந்த விடுதியின்   காவலாளி பற்றி இதே போல்  ஒரு கதை சொன்னார்கள்.அந்த விடுதியே முன்பு அவருடையது தானாம்.தங்கம் செய்கிறேன் பேர்வழி என்று எல்லா சொத்தையும் இழந்து இறுதியில் குடும்பத்தாலும் துரத்தப் பட்டு கடைசியில் தனது விடுதியிலேயே காவலராக காலம் கழிப்பதாக சொன்னார்கள்.அவர் எப்போதும் அனைவரும் தூங்கிய பிறகு சீரோ வாட்ஸ் பல்பின் மங்கிய ஒளியில் ஒரு பழுப்பு புத்தகத்தை கண்களை இடுக்கி படித்துக் கொண்டே இருப்பார்.ஒரு நாள் பகலில் அவர் இல்லாத சமயம் அந்த புத்தகத்தை பிரித்துப் பார்த்தேன். வேறென்ன..''பதினெண் சித்தர்களின் ரசவாத ஞானம்!''

 

LinkWithin

Related Posts with Thumbnails